Sunday 8 November 2020

வன்முறை சூழலில் வாழும் குழந்தைகளை எவ்வாறு கையாளலாம்?

 வன்முறை சூழலில் வாழும் குழந்தைகளை எவ்வாறு கையாளலாம்?



இன்றைய நவீன நூற்றாண்டில்  வன்முறை கலாச்சாரம் என்பது எங்கும் பரவலாக காணப்படுகின்ற ஒன்றாகும். குறிப்பாக குழந்தைகள் மத்தியில் தொலைக்காட்சி மற்றும் கார்ட்டூன்களின் செல்வாக்கு அதிகமாக உள்ளதனால் அதன் ஊ டான வன்முறைகள் குழந்தைகளினால் அதிகம் உள்வாங்கப்படுகின்றது.

அதேநேரத்தில் குழந்தைகள் என்பவர்கள் தாம் எவ்வாறான சூழலில் வளர்க்கப்படுகின்றார்களோ அதனை இயல்பான சாதாரணமானது என உணர்ந்து கொள்கின்றார்கள். இவ்வாறான வன்முறை சூழலில் வளரும்  குழந்தைகளிடம் 3 வகையான விளைவுகளை எதிர்பார்க்கலாம் என உளவியலாளர்கள் கருதுகின்றனர்.

1.தான் அவதானிக்கும் வன்முறை தனக்கும் ஏற்படலாம் என குழந்தைகள் அதிகமாக பயப்படுதல்.

2.வன்முறையாலாளர்களை போல தாமும் சாதிக்கலாம் என்ற எண்ணத்தில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தல்.

3.அமைதியாக வன்முறையை ஏற்றுக்கொண்டு அதனை கையாள தெரியாததனால் அது அவர்களது ஆளுமையில்(personality) பாதிப்பை ஏற்படுத்துகின்றது.



இவ்வாறான சந்தர்ப்பங்களில் வன்முறை கலாச்சாரத்திலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்கலாம்.

1.பெற்றோர்கள் முன்மாதிரியாக செயற்படுதல்.

குழந்தைகளிடம் எமது கோபத்தை வன்முறைமூலம் வெளிப்படுத்துவதை முற்றாக தவிர்த்தல். குழந்தைகளை அடிப்பது மட்டுமல்லாமல் கெட்ட  வார்த்தைகளால் ஏசுதல், நீ எதற்கும் உருப்படி இல்லாதவன் எனக்கூறுதலும் வன்முறையையே

கோபத்தில் தவறுதலாக இவற்றை வெளிப்படுத்தினாலும் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்பதன் மூலம் எமது முன்மாதிரியை வெளிப்படுத்தலாம். மாறாக நாம் கோபப்படலாம் நீ அவ்வாறு செய்யக்கூடாது என்று கற்றுக்கொடுக்கும் போது பாடசாலையில் தன்னை விட பலவீனமான குழந்தைகளிடம் மிரட்டல்  அடித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும்.

2.வன்முறைகள் சூழலில் நடந்தேறும்போது அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை கலந்துரையாடல்

எமது வீட்டிலோ வீட்டிற்கு அருகாமையிலோ வன்முறைகள் அரங்கேற்றப்படும் போது அதனை குழந்தைகள் பார்க்க நேரிட்டால் அதுபற்றி ஆரோக்கியமான கலந்துரையாடலை மேற்கொள்ளல் அவசியமாகும். இவ்வாறான அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடமே கேள்வி எழுப்பி தீர்வுகளை வழங்கலாம். உதாரணமாக எதிர்பாராத கொலைகள் அரங்கேற்றப்படும்போது தெரியாதவர்கள் கதவை தட்டினால் கதவை திறக்கக் கூடாது போன்ற பாதுகாப்பு சட்டங்களை அவர்களுக்கு இதன் போது சொல்லிக்கொடுக்கலாம்.

3.சிறிய குழந்தைகளை நன்றாக களிமண்ணில் விளையாட விடுதல்

சிறிய குழந்தைகளை(<8years) ஈர மணலில் விளையாட விடுவதன் மூலம் அவர்களிடமுள்ள மன அழுத்தத்திலிருந்து வெளியேற வாய்ப்பளிக்களாம். இதன்போது  பயங்கரமான சூழ் நிலையிலிருந்து வெளியேறுவதற்கான சூழ் நிலை அதிகமாகும்.

4.குழந்தைகள் வன்முறைகளை மற்றவர்களிடம் பிரயோகிக்கும்போது அதற்கான மாற்று வழிமுறைகளை கலந்துரையாடுதல்.

தனது சக நண்பர்களிடம் வன்முறையை குழந்தைகள் பிரயோகிப்பதை அவதானிக்கும்போது அவ்வாறு செய்யக்கூடாது என்று அறிவுரை கூறுவதற்கு பதிலாக அவர்கள் வன்முறையை பிரயோகித்ததற்கான காரணத்தை இனங்கண்டு அதனை எவ்வாறு சுமுகமான வழிகளில் தீர்க்கலாம் என்பதனை அவர்களுடன் கலந்துரையாடல். உதாரணமாக குழந்தை மற்றைய குழந்தையை அடிக்கும் போது அடித்ததற்கான காரணத்தை வினவுவதுடன் அதனை வேறு எவ்வாறான வழிகளில் சரிபடுத்தலாம் என்பதனை குழந்தையுடன் கலந்துரையாடுதல்.

5.வன்முறையை ஊக்குவிக்கும் தொடர்புசாதனங்களை துண்டித்தல்

வன்முறையை  குழந்தைகளுக்கு ஊக்குவிக்கும் கார்ட்டூன் சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதனை முற்றாக தடைசெய்தல்.மாறாக வேறுவகையான பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்தல்.

6.தமக்கு ஏற்பட்ட எதிர்மறையான நிகழ்வுகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கல்

தனக்கு ஏற்பட்ட எதிர்மறையான நிகழ்வுகளை குழந்தைகள் அழுகையினூடாகவோ சிரிப்பினூடாகவோ உணர்வுபூர்வமாக வெளிக்கொணர நன்றாக பேச விடுதல்.



2020.11.08

Sunday 9 August 2020

HELICOPTER PARENTING

 

நீண்ட காலத்திற்கு பிறகு குழந்தைகள் கிடைத்தல், பிறந்ததிலிருந்து குழந்தைகள் நோய்க்கு உள்ளாக்குதல் அல்லது ஒரே ஒரு குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் தனது குழந்தைகள் விடயத்தில் அதிகம் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். அந்த குழந்தையின் மீது அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருப்பதனால் அவர்களை சுயமாக இயங்க  விடாமல் பல கட்டுப்பாடுகளை விதிப்பார்கள்.

இத்தகைய குழந்தை வளர்ப்பானது உளவியலில் helicopter parenting எனப்படும். அதாவது குழந்தை செய்யும் எல்லா விடயத்தையும் helicopter மேலே இருந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அதுபோல பெற்றோர்கள் கவனிப்பதை குறிக்கும். இத்தகைய பெற்றோர்கள் தனது குழந்தையை யாரும் எதுவும் சொல்லி விடக்கூடாது மற்றும் வெளியே போனால் விழுந்து விடுவார்கள், இந்த சாப்பாடு கொடுத்தால் ஒத்துக்கொள்ளாது, அவருடன் கதைக்கக் கூடாது என்றவாறு பல கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். மேலும் அடிப்படையான வீட்டு வேலைகளையும் குழந்தைகளை செய்ய விடாது தாமே செய்வார்கள்.

இதனால் குழந்தைகளின் வளர்ச்சியில் உளவியல் ரீதியாக ஏற்படும் பாதிப்பு என்ன?

இத்தகைய குழந்தைகளுக்கு தனது சூழலுடனான சுயமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வாய்ப்புகள் குறைவாக இருப்பதனால் மூளையில் நரம்பெண்களுடனான வளர்ச்சியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

மேலும் இத்தகைய குழந்தைகளுக்கு பல விதமான நபர்களுடன் இணைந்து செயற்படக்கூடிய வாய்ப்பு குறைவாக உள்ளதனால்  அவர்களது சமூக வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இன்று கூட்டுக் குடும்பங்களும்  அருகிக் கொண்டு செல்வதனால் வீட்டில் ஒரே குழந்தையாக மற்றவர்களுடன் இணங்கி வாழத்தெரியாமல் வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் சமூகத்தில் ஒன்றிணைந்து செயற்படும் ஆற்றலை இழப்பதோடு எதிர்மறையான பழக்கவழக்கங்களுக்குள் செல்லும்வாய்ப்பு அதிகமாகும்.

அடிப்படை வாழ்க்கை திறன்களை கற்றுக்கொள்ளாததனால் மற்றவர்களிடம் அதனை எப்போதும் எதிர்பார்ப்பார்கள்.

தாம் சுயமாக இயங்கும் போது  பெற்றோர்களுக்கு தன மீது நம்பிக்கை இல்லை என்ற உணர்வை குழந்தைகள் பெறுவதனால் தன்னம்பிக்கையையும் சுயமதிப்பையையும் இழக்கின்றனர்.

எமது குழந்தை வளர்ப்பில் இந்த பிரச்சினையை எவ்வாறு கையாளலாம்?

பட்டம் ஒன்றை பறக்கவிடும் போது அதன் கயிற்றை மிகவும் இறுக்கமாக பிடிக்கும் போது பட்டம் பறக்காது அதேநேரத்தில் எமது இறுக்கத்தை சற்று தளர்த்தும்போது அது சுதந்திரமாக வானத்தில் பறக்கின்றது. இவ்வகையான நுட்பத்தையே எமது குழந்தை வளர்ப்பிலும் கையாள வேண்டும் என்பது ஒரு உளவியலாளரின்  கருத்தாகும். பாதுகாப்பான சூழல் ஒன்றை உருவாக்கியதன் பிற்பாடு குழந்தைகளை சுதந்திரமாக விடலாம் என்பது அவரது கருத்தாகும்.

உதாரணமாக தேவையற்ற பொருட்களை குழந்தை பொறுக்கி சாப்பிட்டால் நோய் வந்துவிடும் என்ற பயத்தில் தரையில் விளையாட அனுமதிக்காமல் இருப்பதை விட தரையை நன்று சுத்தம் செய்து விட்டு பாதுகாப்பான சூழலில் குழந்தையை சுதந்திரமாக விளையாட விடுவதே சிறந்த குழந்தை வளர்ப்பாகும்.


www.drsanoosiya.blogspot.com.
2020.08.09

Wednesday 22 July 2020

குழந்தைகள் பாடசாலை செல்ல ஏன் மறுக்கின்றனர்?



குழந்தைகளின் பாடசாலை செல்வதற்கான ஆயத்த நிலையில், உடலியல் மற்றும் உளவியல் காரணங்கள் பங்களிப்பு செலுத்துகின்றன என்பது உளவியலாளர்களின் கருத்தாகும்.

குழந்தைகள் பாடசாலை செல்ல மறுப்பதற்கான காரணங்கள்
  
  •  Separation anxiety எனப்படும் பெற்றோரை பிரிந்து இருப்பதற்கான பயம் பிரதான காரணமாக கருதப்படும். வீட்டில் ஒரு குழந்தையாக வளரும் குழந்தைகளிடத்தில் இது அதிகமாக காணப்படும். வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் குழந்தைகளிடத்தில் சிறுவயதிலிருந்து பெற்றோரை பிரிந்து பழகி இருப்பதனால் இதன் தாக்கம் குறைவாக இருக்கும்
  •  குழந்தையின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் குழந்தையுடன் ஆசிரியர் கண்டிப்பாக நடந்து கொள்ளும் போது குழந்தை பாடசாலை செல்ல மறுக்கலாம்.
  • குழந்தைக்கு இரவு தூக்கம் குறைவாக இருத்தல் மற்றும் காலை உணவு சாப்பிடாமல் செல்லல். இதனால் பாடசாலை செயற்பாடுகளில் ஒருமுகப்படுத்த முடியாமையினால் குழந்தை பாடசாலை செல்ல மறுக்கலாம்.
  • நீண்ட தூரம் பாடசாலைக்காக பயணித்தலும் பயத்தை அதிகரிக்கும்.
  • குழந்தைக்கு கற்றல் சம்பந்தமான பிரச்சினைகள் இருந்தல்.
இப்படியான பிரச்சினைகளை எதிர்நோக்கும் சில குழந்தைகள், தான் பாடசாலை செல்ல மாட்டேன் என நேரடியாகச் சொல்வார்கள். இன்னும் சிலர் avoidance behaviors மூலம் அதனை வெளிக்காட்டுவார்கள்.

உதாரணமாக வேண்டுமென்றே இரவில் நேரம் சென்று தூங்கச்சென்று காலையில் நேரம் சென்று எழும்புதல். கை, கால், வயிறு வலிக்குது எனக் கூறல். இன்னும் கடுமையாகும் போது வாந்தி எடுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவர். குழந்தைக்கு மனப் பயம் அதிகமாக உள்ள போது, குழந்தை உண்மையாகவே இத்தகைய நோய் அறிகுறிகளை உணரலாம்.



பாடசாலை செல்ல மறுக்கும் குழந்தைகளை எவ்வாறு கையாளலாம்?
  • குழந்தையின் அன்றாட பழக்க வழக்கங்களில் மாற்றங்களை கொண்டு வருதல்.


குழந்தைகளுக்கு 10-12 மணித்தியாலங்கள் இரவு தூக்கம் அவசியம் என்பது அநேக உளவியலாளர்களின் கருத்தாகும். இது மன அழுத்தத்திற்கான ஹார்மோன்களின் அளவை மூளையில் குறைத்து காலையில் முணங்கிக் கொண்டு அழுதுக்கொண்டு எழும்புவதை தடுக்கும். மேலும் காலையில் குழந்தை மனப்பயத்துடன் காணப்பட்டாலும் நன்றாக தூங்கி அமைதியாக உள்ள குழந்தையிடம் கலந்துரையாடல் மூலம் அதனை மாற்றி அமைக்கலாம்.

அமைதியான முறையில் காலை உணவை வழங்குதல். 

இதுவும் நேரத்துடன் எழும்பும் குழந்தையிடமே சாத்தியமாகின்றது. அதேவேளை அதிகளவு உணவை ஒரேநேரத்தில் வழங்கும் போதும் குழந்தை அதை உண்பதில் சிரமத்தை எதிர்நோக்கும். உதாரணமாக பாலையும் மற்றைய காலை ஆகாரத்தையும் ஒரேநேரத்தில் வழங்குதலை குறிப்பிடலாம். இதற்கு மாறாக குறைந்த அளவில் சத்துள்ள ஆகாரத்தை வழங்கலாம். 
  •  தினமும் பாடசாலை அனுப்புதல்.

குழந்தை பாடசாலை செல்ல மறுக்கின்றது என்பதற்காக அடிக்கடி விடுமுறை வழங்கும் போது அவர்களிடம் பாடசாலை செல்வதற்கான coping skill விருத்தி அடைய தாமதமடையலாம். எனவே குழந்தை பாடசாலை செல்ல மாட்டேன் என அடம்பிடிக்கும் போது அவர்களை அமைதிபடுத்தி தினமும் அனுப்புதல் அவசியமாகும். பொதுவாக குழந்தைகள் பாடசாலை செல்வதற்கான coping skillயை விருத்தி செய்ய 2-3 மாதங்கள் வரை செல்லலாம். ஆகவே அதுவரை பொறுமையாக இருத்தல் அவசியமாகும்.
  • ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் சிறந்த உறவை பேணுதல்.

பெற்றோர்கள் குழந்தை பாடசாலை செல்ல மறுக்கும் விடயத்தை ஆசிரியரிடம் சுமுகமாக கலந்துரையாடுதல். பாடசாலைகளில் பயிற்சி கொப்பிகளை சேகரித்தல் போன்ற  சின்ன சின்ன பொறுப்புக்களை குழந்தைகளுக்கு  வழங்குதல். இதன் மூலம் நாம் பாடசாலை சென்று ஏதாவது செய்ய முடியும் என்ற உணர்வை ஏற்படுத்துவதோடு பாடசாலை பற்றிய பயத்தை போக்கும்.

கற்றல் நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் குழந்தைகளிடம் பிரச்சினைகளை இணங்காணும் போது அவற்றை பெற்றோர்களுடன் கலந்துரையாடுவதுடன் அதற்கான தீர்வை பெற இருபாலாரும் ஒருவருக்கொருவர் உதவுதல்.
  • பிரிவினால் ஏற்படும் பயத்தை குறைத்தல்

''நீங்கள் பாடசாலை சென்று வாருங்கள் நாம் இந்த வேலைகளை செய்வோம்'' என்றவாறு கூறும்போது அவர்களுக்கு பெற்றோர்கள் நாம் பாடசாலை சென்று வரும்போது வீட்டில் இருப்பார்கள் என்ற மனநிலையை ஏற்படுத்தும். இது separation anxietyஆல் ஏற்படும் பயத்தை குழந்தைகளுக்கு இல்லாமலாக்குகின்றது.

மேலும் டசாலை செல்லாவிட்டால் நான் அதிபரிடம் சொல்லுவேன் போன்ற பயமுறுத்தல்களை செய்ய வேண்டாம். இதுவும் குழந்தைக்கு பாடசாலை பற்றிய பயத்தை அதிகரிக்கும்.
  • குழந்தைகளிடம் காணப்படும் மன அழுத்தத்தை போக்குவதற்கு நன்றாக விளையாட அனுமதித்தல்.

www.drsanoosiya.blogspot.com.

2020.07.22