Tuesday 2 August 2022

 

 தொழில் பார்க்கும் பெற்றோர்களும் குழந்தை வளர்ப்பும்.

சமகாலத்தில்  தொழில் பார்க்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதேவேளை அவர்களது குடும்பவியலில் ஏற்பட்டுள்ள பிரதான பிரச்சினை குழந்தைகளை வளர்ப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் ஆகும். குழந்தைகள் பெற்றோர்களின் போதிய அரவணைப்பை இழந்து தவிக்கும் அதேவேளை, தனது குழந்தைகளை சரியான விதத்தில் கவனிக்க முடியவில்லை என்ற குற்ற உணர்வுக்குள் அகப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகும் பெற்றோர்களையும் இன்று சர்வசாதாரணமாக காணக்கூடியதாக உள்ளது. இந்த மன உளைச்சலுக்கு அதிகம் அகப்பட்டு தனது தொழிலையும் கைவிட்டுச் செல்லும் பெற்றோர்களும் உண்டு.

பெற்றோர்கள் தமது நேரத்தை வினைத்திறனாக பயன்படுத்த கற்றுக்கொள்ளும் போது, தமது குழந்தைகளுடன் செலவிடக்கூடிய காலத்தை அதிகரிக்க முடியும் என்பது வெளிப்படையான உண்மையாகும். சமூக வலைத்தளங்களினூடாக குடும்பவியலுக்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கும் ஒரு ஆங்கிலேய பெண்ணின் குடும்பவியலுக்கான நேர முகாமைத்துவ குறிப்புக்கள் காத்திரமானவை என்பதனால் அதனை இங்கு பகிரலாம் என எண்ணுகின்றேன்.

ஒருநாளின் ஆரம்பித்திலேயே அந்த நாளை திட்டமிடல்

ஒரு நாளுக்கான வேலைகளை திட்டமிடலுடன் ஆரம்பிக்கும்போது வினைத்திறனாகவும் அதேவேளை விரைவாகவும் செய்து முடிக்க ஏதுவாகின்றது.

குழந்தைகள் தூங்கும் காலத்தை எமது ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தல்.

குழந்தைகள் தூங்கும் நேரத்தில்  எமது தேவைகளை திட்டமிட்டு செயற்படுத்தும் போது அவர்கள் விழித்திருக்கும் காலத்தை அவர்களுடன் முழுமையாக செலவழிக்க வாய்ப்பாக அமையும்.

சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகுவதை இயன்றளவு தவிர்த்தல்.

வீட்டு வேலைகளில் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரையும் ஈடுபடச்செய்தல்.

அநேகமான இடங்களில் ஒரு பெற்றோர் தனது அலுவலக வேலைகளில் அதிகம் ஆர்வம் காட்டும் அதேவேளை மற்றவர் மீது முழு குடும்பப் பொறுப்பையும் சுமத்துவதை எம்மால் காணமுடிகின்றது. தொழிலுக்கும் குடும்பவியலுக்கும் இடையில் சமத்துவம் பேணப்படாத வரை ஆரோக்கியமான குடும்பத்தை கட்டியெழுப்ப முடியாது. எனவே ஆரம்பத்திலிருந்து பெற்றோர்கள் இருவரும் கலந்தாலோசித்து குடும்பப் பொறுப்புகளில் சமநிலையை மேற்கொள்வது அவசியமாகும்.

குழந்தைகளை பொறுத்தவரையிலும் சிறிய வயதிலிருந்தே chore rota உருவாக்கி அவர்களது வயதிற்கு ஏற்ற வகையில் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தும் போது அவர்களது பொறுப்புணர்வை வளர்க்க சிறந்த வாய்ப்பாக அமையும்.

தன்னை கவனிப்பதற்கு  நேரத்தை ஒதுக்குதல்

தமது அடிப்படை தேவைகளை சரியான முறையில் பூர்த்தி செய்யாமல் குழந்தை பராமரிப்பில் முழுமையாக ஈடுபடும் போது மன அழுத்தங்களுக்கு உள்ளாக்குவதற்கான வாய்ப்பு அதிகமாகும். எனவே எமக்கு நாமே ஓய்வெடுத்து கொள்வதும் இடைக்கிடையே வெளி இடங்களுக்கு சென்று நண்பர்களை சந்தித்தல் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் போது ஆரோக்கியமான குடும்ப பிணைப்பை ஏற்படுத்துவதற்கான மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

குழந்தைகளை பிரிந்து அதிக நேரம் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் சில பெற்றோர்கள் தமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்  குழந்தைகளை திருப்திபடுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களை வெளியே கூட்டிச்சென்று கேட்கும் எல்லா பொருட்களையும் வாங்கிக் கொடுப்பதை காண்கிறோம். இதுவும் குழந்தை வளர்ப்பில் பிழையான அணுகுமுறையாகும். குழந்தைகளை பொறுத்த வரையில் எமது அன்பை பொருள் அளவில் நீண்ட தூரம் திருப்திப்படுத்த முடியாது.

ஆகக் குறைந்தது இருபது நிமிடங்களாவது குழந்தைகளுடன் High quality time செலவழிக்கும் போது அவர்களுக்கும் எமக்கும் உண்டான உறவை வலுப்படுத்த முடியும் என சில குழந்தை உளவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த நேரம் குழந்தைகளை முற்றாக சுவாரஷ்யப்படுத்தும் நேரமாக இருத்தல் வேண்டும். இதன்போது அவர்களது குறைகளை இனங்கண்டு திருத்தும் நேரமாகவோ கல்வி விடயம் சம்பந்தமாக வினவும் நேரமாகவோ இல்லாமல் அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டை அவர்களுடன் முழுமையாக இணைந்து விளையாடுதல் போன்றவற்றை குறிப்பிடலாம். இது நமது பெற்றோர்கள் நமக்காக எதையும்செய்ய முனைந்தவர்கள் நாம் அவர்களுக்கு முக்கியமானவர்கள் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.

மற்றும் குறைந்தது ஒரு வேளை சாப்பாட்டையாவது குழந்தைகளுடன் குடும்பமாக இணைந்து உண்பது, பின்னர் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவுதல், இடத்தை சுத்தப்படுத்துதல் போன்ற விடயங்களை ஒன்றாக இணைந்து செயற்படுத்தும் போது எவ்வளவு நாம் பிசியாக இருந்தாலும் எல்லோரும் ஒன்றாக உள்ளோம் என்ற உணர்வை ஏற்படுத்தும்.

சிலவேளைகளில் எமது பலவீனத்தை குழந்தைகள் இனங்கண்டு  கொண்டு தமது விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக குற்ற உணர்வை அவர்களே வளர்ப்பார்கள். உதாரணமாக தனது நண்பரின் அம்மா ஒவ்வொரு நாளும் பூங்காவிற்கு கூட்டிச்செல்கின்றார் நீங்கள் கூட்டிச்செல்வதில்லை என்று கூறும்போது அம்மா சாக்லேட் வாங்கித்தருவார் என்ற புரிதலுடன் உள்ள குழந்தை அதனை திருப்பித் திரும்பி சொல்லிக்காட்டும். இங்கு நாம் அவர்களுடைய வலைக்குள் சிக்கிவிடாமல் குறிப்பிட்ட நாளில் நான் கூட்டிச் செல்கின்றேன் என்று வாக்குறுதி வழங்குவதுடன் அந்த வாக்குறுதியை மீறாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வாக்குறுதியை பொடுபோக்காக விடும் போது குழந்தை நம்மீதுள்ள நம்பிக்கையை இழந்து விடும்.

இறுதியாக இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் இருவரும் தூர இடங்களில் தொழில் பார்க்கும் பெற்றோர்களிடத்தில் பரவலாக எதிர்நோக்கும் பாரிய சவால்களில் ஒன்று single parenting எனப்படும் ஒரு பெற்றோருடனான தனிமைப்படுத்தப்பட்ட குழந்தை வளர்ப்பு ஆகும். இதன்போது ஒரு பெற்றோர் முழு குழந்தை வளர்ப்பையும் உள்வாங்கிக்கொண்டு பல மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர்.

 

இத்தகையவர்கள் சமூகத்தில் தமது வளர்ச்சியை மாத்திரம் எதிர்பார்ப்பவர்களுடன் தொடர்புகளை மேற்கொள்வதோடு நச்சுக் கருத்துக்களை வெளியிடும் நபர்களுடன் தொடர்புகளை இயன்றளவு குறைத்துக்கொள்ளல் எமது மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கான சிறந்த வழிமுறையாகும். மேலும் குறுகிய அல்லது நீண்ட விடுமுறையில் வீட்டுக்கு வரும் மற்றைய பெற்றோர் வீட்டில் உருவாக்கப்பட்ட ஒழுக்க நடைமுறைகளை மீறாத வகையில் தமது நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ளல் அவசியமாகும். உதாரணமாக குழந்தைகள் தூங்கும் நேர ஒழுங்கு போன்றவையை குறிப்பிடலாம்.

06.06.2020

F. Sanoosiya Mahmoodh

Medical officer, Base Hospital Mallavi

No comments:

Post a Comment