Thursday, 9 July 2020

குழந்தைகள் எப்போது முன்பள்ளி(Preschool) கற்றலுக்கு தயாராகின்றனர்?



சிறுவர்களை பொறுத்தவரையில் குழந்தை பருவத்திலிருந்து முன்பள்ளி பருவத்தை நோக்கிய பயணம் என்பது வாழ்வின் பிரதான மைல்கல்லாக கருதப்படுகின்றது. இந்த பருவத்தில் தனது குழந்தைகளுக்கு எல்லாவகையான கல்வித்தகைமைகளையும் வழங்க வேண்டும் என்பதில் பெற்றோர்களின் ஆர்வம் அளப்பெரியது. 

அதேநேரத்தில் முன்பள்ளி பாடசாலைகள் குழந்தைகளை எல்லா வயதிலும் உள்வாங்குவதனால் பெற்றோர்கள் மத்தியில் எந்த வயதில் தனது குழந்தைகளை முன்பள்ளிற்கு அனுப்ப வேண்டும் என்பதில் குழப்பநிலை காணப்படுகின்றது. வயது என்பது ஒரு குழந்தையின் கற்றலின் ஆயத்தநிலையை தீர்மானிப்பதில்லை என்பது அநேக உளவியலாளர்களின் கருத்தாகும். மாறாக குழந்தைகள் முன்பள்ளிப்பாடசாலைக்கு செல்வதற்கு முன்னால் சில திறன்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் அவர்களது முன்பள்ளி கற்றல் நடவடிக்கைகள் சிறப்பாக அமையும் என்பது அவர்களது கருத்தாகும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்தவுடன் மாவு ஊற்ற கூடாது. மாறாக அது சரியான பதத்தில் சூடான போது மாவு ஊற்றினால் அது தோசையாக மாறும். அதே போல குழந்தைகள் உளவியல் மற்றும் உடலியல் ரீதியான அடிப்படையான திறன்களை பெற்றதன் பிற்பாடு முன்பள்ளிகளுக்கு செல்லும்போது அவர்களது கற்றல் நடவடிக்கைகளை சிறந்த முறையில் ஆரம்பிக்கலாம்.

குழந்தைகள் பிறந்தது முதல் வீட்டிலுள்ள பெரியவர்கள் அனைவரது கவனமும் அவர்கள் மீதே காணப்படுகின்றது. அவர்களை சுற்றி உள்ளவர்கள் அவர்களுடன் விளையாடுவதும் கொஞ்சி பேசுவதும் தொடர்ச்சியாக காணப்படும். குழந்தைகள் முன்பள்ளிப்பருவத்தை அடைந்தவுடன் அவர்களை திடீரென பாடசாலைக்கு அனுப்பும்போது அந்த பெரியவர்களின் கவனிப்பு இல்லாமலாகின்றது. ஒரு ஆசிரியரின் கவனிப்பு வகுப்பிலுள்ள 10-20 குழந்தைகளுக்கு பிரிக்கப் படுகின்றது. இந்த கவன இழப்பிற்கு தயாராக்க கூடிய மனப்பலத்தை வளர்த்தெடுக்க வேண்டியது பெற்றோர்களின் பொறுப்பாகும்.

முன்பள்ளி செல்வதற்கு முன்னால் குழந்தைகளிடம் மூன்று வகையான உளவியல் திறன்களை  வளர்த்தெடுப்பதன் மூலம் இது சாத்தியமாகின்றது என்பது குழந்தை வளர்ப்பு நிபுணத்துவர் Dr Debmita Dutta அவர்களின் கருத்தாகும்.

குழந்தைகள் அழைத்தவுடன் எமது கவனம் அவர்கள் மீது திரும்பாது என்பதனை புரிந்துக் கொள்ள வேண்டும்.

அதாவது குழந்தைகள் ஒரு விடயத்தை நாடி உங்களை அழைக்கும் போது ''கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் குறிப்பிட்ட வேலையை முடித்துக்கொண்டு விரைவில் வருகின்றேன்'' போன்ற வார்த்தைகளை சொல்லிப்பழகுதல் வேண்டும்.
மாறாக நாம் குழந்தைகள் அழைக்கும் போதெல்லாம் எமது வேலைகளை விட்டுவிட்டு உடனே எமது கவனத்தை அவர்கள் மீது திருப்பும்போது இதனை ஆசிரியரிடம் எதிர்பார்க்கும் போது அது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை வழங்கும்.

குழந்தைகள் தமது வேலைகளை செய்யும்போது எப்போதும் மற்றவர்களது கவனம் அவர்கள் மீது இருக்காது என்பதனைபுரிந்துக்கொள்ள வேண்டும்

உதாரணமாக குழந்தைகள் விளையாடும் போதோ படங்களை வரையும் போதோ எமது கவனத்தை தொடர்ச்சியாக அவர்கள் மீது வழங்கும் போது பாடசாலையில் ஆசிரியரிடமும் இதனையே எதிர்பார்ப்பார்கள். இது வகுப்பறை நடவடிக்கைகளை குழப்புவதுடன் குழந்தை மீது தப்பபிப்பிராயம் ஏற்பட ஏதுவாகும்.

எல்லோரும் சிலநேரங்களில் முதல் வாய்ப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் அதேவேளை இறுதி வாய்ப்பையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற உண்மையை குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும்.


இது அவர்கள் பொதுவாக  விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடும்போது தனக்கான வாய்ப்பு வழங்கப்படும் வரை காத்திருக்க வழிவகுக்கும்.



உடலியல் ரீதியான பின்வரும் பிரதான திறன்களையும் குழந்தைகளிடம் வளர்த்தெடுத்தல் அவசியமாகும்.
  • சுயமாக  மலசலம் கழிப்பதற்கான உணர்வை பெற்றிருப்பதுடன் அதனை புது நபரிடம் சொல்லக்கூடிய திறனை குழந்தை பெற்றிருத்தல் வேண்டும்- Potti training

  • சுயமாக உணவை கைகளால் எடுத்து சாப்பிட பயிற்றுவிக்கப்பட்டிருத்தல்  வேண்டும்- Teddy bear picnics


  • Shoes சுயமாக போட்டு கழற்றுதல்பொத்தான்  கழற்றுதல், Tiffin box மூடி திறத்தல் போன்ற திறன்களை குழந்தை பெற்றிருத்தல் வேண்டும். 


  • குழந்தைகள் பெற்றோர்களை நீண்ட நேரம் பிரிந்து இருப்பதனால் ஏற்படும் பயத்தை ஓரளவு கையாள்வதற்கான தைரியம் வழங்கப் பட்டிருத்தல் வேண்டும்- Parental anxiety

  • நல்ல மற்றும் கெட்ட தொடுகை சம்பந்தமான அடிப்படை பாலியல் விபரங்கள் ஊட்டப்படல் வேண்டும்- Bad touch and good touch

  • தனது பெயரை அழைக்கும் போது அதனை இணங்காணக்கூடியவர்களாக இருத்தல் வேண்டும்


இதனால்தான் குழந்தை உளவியலாளர் Maria Montessory ''குழந்தைகள் கற்றலில் சிறந்து விளங்க வேண்டுமென்றால் சுயமாக இயங்குவதற்கான அடிப்படை திறன்கள் வளர்த்தெடுக்கப் பட வேண்டும்'' என வலியுறுத்துகின்றார். மற்றவர்களிடம் தங்கிவாழும் குழந்தையால் கற்றல் நடவடிக்கைகளில் சிறந்து விளங்க முடியாது என்பது அவரது நம்பிக்கையாகும். குழந்தை மற்றவர்களில் தங்கி  இல்லாமல் சுயமாக இயங்கும்போது புதிய அனுபவங்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள கற்றுக் கொள்கின்றனர் . இத்தகையோர் கற்றல் நடவடிக்கைகளில் விரைவாக ஈடுபடுவர்.


மேலும் குழந்தை செல்லப் போகும் பாடசாலை மற்றும் ஆசிரியர் சம்பந்தமாக சுவாரஷ்யமாக அவர்களுடன் கலந்துரையாடல். மற்றும் அவர்களை கூட்டிச்சென்று கடையில் water bottle, bags வாங்கிக் கொடுத்தல் போன்றவை அவர்களுக்கு பாடசாலை சம்பந்தமான ஆர்வத்தை கூட்ட ஏதுவாக அமைகின்றது.

www.drsanoosiya.blogspot.com.
2020.07.09


Wednesday, 1 July 2020

குழந்தைகள் ஏன் பிடிவாதம் பிடிக்கின்றார்கள்?



தனக்கு சிறுவயதில் கிடைக்காத எல்லாம் தன் குழந்தைக்கு கிடைக்க வேண்டும் என்பது இன்றைய பெற்றோர்களின் ஆதங்கமாக உள்ளது. இதனால் சுதந்திரம் என்பது மிகவும் சாதாரணமாக குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றது.மிதமிஞ்சிய சுதந்திரத்தை குழந்தைக்கு வழங்கும் போது அதனை சரியாக புரிந்துகொள்ள முடியாத குழந்தைகள் அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த ஆரம்பிக்கின்றார்கள்.

ஆரம்பத்தில் குழந்தைகளை பொறுத்தவரையில் தமக்கு கிடைத்த சுதந்திரத்தை முழுமையாக புரிந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் அதனை பெற்றோர்களிடம் ஆராய்ச்சி செய்து பார்ப்பார்கள். தான் செய்யும் செயலை பெற்றோர்கள் எந்தளவு தூரம் செய்ய விடுவார்கள் என ஆராய்ச்சி செய்வார்கள். இதன்போது நாம் ஒரு வரையறையை மேற்கொள்ளும் போது குழந்தை பொறுப்புணர்வை கற்றுக் கொள்கின்றது. மாறாக சிறிய குழந்தைதானே அல்லது எனது குழந்தைக்கு இல்லாததது வேறு யாருக்கு என்றவாறு சுதந்திரத்தை குழந்தைக்கு வழங்கும் போது அதனை சரியாக புரிந்துகொள்ள முடியாத குழந்தைகள் அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த ஆரம்பிக்கின்றார்கள். இதுவே பிற்காலத்தில் பிடிவாதகுணமாக உருவெடுக்கின்றது. குழந்தை பிடிவாதம் பிடிக்க பிடிக்க நாம் வழங்கும்போது அதன் வீரிய தன்மை அதிகரிக்கின்றது.

உதாரணமாக தான்  அழுதால் தன்னை தூக்குவார்கள் என்ற புரிதலுடன் வளரும் குழந்தை   தேவையை நிவர்த்தி செய்ய ஒவ்வொரு தடவையையும் அழ ஆரம்பிக்கும். அதனை கண்டுகொள்ளாது விடும்போது நாம் தூக்கும் வரை அழுதுகொண்டு இருக்கும். அல்லது முதலில் அம்மாவுக்கு மட்டும் கேட்குமாறு அழுத குழந்தை பின்னர் சுற்றி உள்ளவர்களுக்கும் கேட்குமாறு அழுகையின் சத்தத்தை உயர்த்தும். இதுவே testing of limit எனப்படும்.  தாம் பிரச்சினையை ஏற்படுத்தும்போது நமக்கு அதற்குண்டான பெறுபேறு நாம் எதிர்பார்க்கும் நபரிடம் இருந்து கிடைக்கின்றதா என குழந்தை ஆராய்ச்சி செய்யும் நிலையாகும்.

இதே போல gadgetஇற்கு addictஆன குழந்தை அதனை அவர்களிடம் இருந்து பறிக்கும்போது ரொம்பவும் சோர்வாக உள்ளவர் போல நடிப்பார்கள். அதனை கண்டுகொள்ளாது விடும்போது மனஅழுத்தத்தில் உள்ளவர்கள் போன்ற நடத்தையை காண்பிப்பதும் testing of limitஇன் ஒரு வகையாகும்.


பிடிவாதம் பிடிக்கும் குழந்தையை எவ்வாறு கையாளலாம்?      


1. குழந்தை பிடிவாதம் பிடிக்கும் போது அதற்கு எந்த ஒரு பிரதிபலிப்பையும் வழங்காதிருத்தல்.

குழந்தைகளை பொறுத்தவரையில் தான் நினைத்ததை சாதிப்பதற்காக பல உத்திகளை கையாள்கின்றனர். சில குழந்தைகள் அழுது சாதிப்பார்கள். சிலர் அடித்து சாதிப்பார்கள். சிலர் முரட்டுத்தனத்தை கையாண்டு சாதிப்பார்கள். எதை செய்தால் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்பதில் நேரடி தொடர்பு உண்டு. அந்த தொடர்பினை துண்டிக்காதவிடத்து ஒரு புதிய பழக்கத்தை குழந்தைகளிடம் உருவாக்க முடியாது.

எனவே குழந்தை பிடிவாதம்பிடிக்கும் போது நாம் எந்த ஒரு பிரதிபலிப்பையும் கொடுக்க கூடாது. அறிவுரைகள் மற்றும் வார்த்தைகளாக கூட எமது பிரதிபலிப்பு இருக்க கூடாது. அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு எமது கவனத்தை அவர்களிடம் இருந்து திருப்புதல் அவசியமாகும். குழந்தை testing of limitயை தாண்டும் போது தனது செயலால் பயனில்லை என்பதை உணர்வதனால் அந்த எதிர்மறையான பழக்கத்தை  மேலும் விருத்தி செய்யாது.

2. வீட்டிலுள்ள எல்லோரும் குழந்தை வளர்ப்பில் ஒரே ஒழுங்கை பின்பற்றல்.

ஒரு பழக்கத்தை குழந்தையிடம் இருந்து இல்லாதொழிக்க வேண்டுமென்றால் வீட்டில் உள்ள எல்லோரும் ஒரே குரலில் பேசினாலே ஒழிய அதனை இல்லாதொழிக்க முடியாது. உதாரணமாக குழந்தை அழுதாலும் நான் தூக்க மாட்டேன் என்ற கொள்கையை தாய் கடைபிடிக்க வீட்டிலுள்ள தாத்தா பாட்டி அதனை பின்பற்றாமல் இருக்கும் போது குழந்தையின் அழுகையை ஒரு போதும் இல்லாமலாக்க முடியாது.

3. எந்த ஒரு சூழ்நிலையிலும் குழந்தை வளர்ப்பில் கடைபிடிக்கும் ஒழுங்குகளில் மாற்றத்தை கொண்டுவராதிருத்தல்.

பொதுவாக குழந்தைகள் வீட்டுக்கு விருந்தினர்கள் வரும்போது அல்லது வெளி இடங்களுக்கு கூட்டிச்செல்லும்போது அவர்களை எதிர்த்து திட்ட மாட்டார்கள் என உணரும் போது  தமது பிடிவாத குணத்தை அதிகம் காண்பித்து தனது தேவைகளை சாதிக்க நினைப்பார்கள். எனவே  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது வளர்ப்பு முறையில் கடைபிடிக்கும் ஒழுங்குகளில் மாற்றத்தை கொண்டு வராமல் இருப்பது அவசியமாகும்.

           

www.drsanoosiya.blogspot.com.
2020.07.01

Tuesday, 23 June 2020

குழந்தைகள் ஏன் பொய் சொல்கின்றார்கள்?



குழந்தைகளை பொறுத்தவரையில் மூன்று வயதிலிருந்தே பொய் சொல்ல ஆரம்பிக்கின்றனர். இந்த வயதிலேயே எமது மனத்திலுள்ளவற்றை எமது பெற்றோர்களால் புரிந்துகொள்ள முடியாது என்ற உண்மையை புரிந்து கொள்கின்றனர். 4-6 வயதில் நமக்கு தெரியாத அளவுக்கு பொய் சொல்ல ஆரம்பிப்பார்கள். 8 வயதளவில் பொய்க்கும் உண்மைக்கும் வித்தியாசம்தெரியாத அளவுக்கு பொய் சொல்லுவார்கள்.

உளவியலை பொறுத்த வரையில் குழந்தைகள் பொய் சொல்வதற்கான காரணத்தை பிரதானமாக மூன்று வகையாக பிரிக்கின்றது.
  1. தான் செய்த செயல் தண்டனையை பெற்றுத்தரும் என உணரும்போது
  2. மற்றவர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காக
  3. தான் பொய் சொன்னால்தான் தன்னை கவனிப்பார்கள் என்ற உணர்வை குழந்தை பெறும் போது


தான் செய்த ஒரு விடயம் தனக்கு தண்டனையை அல்லது அச்சுறுத்தலை கொண்டு வரும் என பயப்படும் போது  குழந்தை பொய்சொல்லும்.


உதாரணமாக பரீட்சையில் நல்ல பெறுபேரு கிடைக்காவிட்டால் பெற்றோர் தண்டிப்பார்கள் அல்லது ஏசுவர்கள் என பயப்படும் குழந்தை மதிப்பெண்ணை மாற்றி எழுதுதல் அல்லது ஒழித்துவிட்டு ஆசிரியர் தரவில்லை எனக்கூறல் என்பவற்றை குறிப்பிடலாம்.

 எல்லோருடைய கவனத்தையும் தன்  பக்கம் திருப்புவதற்காக நடந்த விடயத்தை பெரிதுபடுத்தி பொய்  சொல்லுதல்.

இது ஆரம்பத்திலிருந்து பெற்றோர்கள் சிறிய விடயங்களுக்கும் பெரிய பாராட்டு கொடுப்பதனால் ஏற்படுகின்றது. உதாரணமாக குழந்தை சித்திரம் என்ற பெயரில் எதை கிறுக்கினாலும் அதனை வெகுவாக பாராட்டுவதோடு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடுதல். இதன்போது குழந்தை சிறிய விடயங்களுக்கும் பெரிய பாராட்டுதலை பெற்று பழகி இருப்பதால் தானும் பாடசாலையில் ஆசிரியர் சிறிதாக சொன்னாலும் தன்னை காலை கூட்டத்தில் அழைத்து சொன்னார் என விடயத்தை பெரிதுபடுத்தி பொய் சொல்ல ஆரம்பிக்கும்.

தான் பொய் சொன்னால்தான் தன்னை கவனிப்பார்கள் என்ற உணர்வை குழந்தை பெறும் போது குழந்தை பொய் சொல்லுதல்.

தாய் தந்தை இருவரும் தொழில் பார்க்கும் வீடுகளில் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்காத போது அவர்களை தன்  பக்கம்  ஈர்ப்பதற்காக குழந்தை  பொய் சொல்ல ஆரம்பிக்கின்றது. உதாரணமாக மற்ற பெற்றோர்கள்போல தன்னுடைய பெற்றோரும் பாடசாலை விடயங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தான் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளதாக பொய் சொல்லி பாடசாலைக்கு  கூட்டிச் செல்லல்.

இந்த மூன்று வகையான பொய்க்கும் பெற்றோர்களினுடைய வளர்ப்பிலேயே மாற்றம் தேவைப்படுகின்றது.

குழந்தைகள் பொய் சொல்வதை எவ்வாறு தடுக்கலாம்?


பெற்றோர்கள் முன்மாதிரியை கடைபிடித்தல்.


குழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க வேண்டுமென்றால் உண்மை சொல்வதற்கான சூழலை உருவாக்குதல் வேண்டும். சிறிய விடயங்களுக்கும் குழந்தைகளிடம் பொய் சொல்லுதலை இயன்றளவு குறைத்தல். உதாரணமாக தனக்கு பேனை வாங்கி வருமாறு குழந்தையிடம் கூறும்போது கடை மூடியுள்ளது என பொய்  சொன்னால் 7 வயதை அடைந்த குழந்தையால் பெற்றோர் பொய் சொல்கின்றாரா இல்லையா என்பதனை இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.

அதேநேரத்தில் நமக்காக குழந்தைகளை பொய் சொல்ல வைக்காதிருத்தல். உதாரணமாக ஒருவரின் தொலைபேசி அழைப்பை தவிர்ப்பதற்காக குழந்தையிடம் அப்பா வீட்டில் இல்லை என்று மறுமொழி வழங்குமாறு கூறுதல். இங்கு பெற்றோர்கள் பொய் சொல்லும்போது நாமும் பொய் சொல்லலாம் என்பதனை குழந்தை புரிந்து கொள்கின்றது.

குழந்தைகளை பயமுறுத்த சமாதானப்படுத்த பேய் சூனியம் மந்திரம் போன்ற விடயங்களை கூறுதல். இதன் போது நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கின்றது என்று புரிந்து கொள்ள முடியாமல் குழந்தைகளும் தமது நிகழ்வுகளில் இவற்றை வெளிப்படுத்தும்.

குழந்தை தோல்வி வெற்றி எதை சந்தித்தாலும் ஆதரவாக இருக்க வேண்டும். 



வெற்றியின் பொது வெகுவாக பாராட்டுவதோடு தோல்வியின் போது  தண்டிக்கும்போது அதிலிருந்து தப்பிப்பதற்காக பொய் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

பெற்றோர்கள்  நேரம்கவனம்புரிதல்அன்பு சரியான விதத்தில் குழந்தைகளுக்கு வழங்ககுதல்.



பெற்றோர்களது நேரம், கவனம், புரிதல், அன்பு சரியான விதத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படாத போது குழந்தை அதனை பெற்றுக்கொள்ள பொய் சொல்வதன் மூலம் கவனத்தை தன் பக்கம் திருப்புவார்கள். இதனை தவிர்க்க பெற்றோர்கள் எவ்வளவு busyயாக இருந்தாலும் குழந்தைகளுடன் quality time செலவழித்தல் அவசியமாகும்.

ஒரு விடயத்தை குழந்தை செய்யும்போது அதற்கு சரியான விதத்தில் feedback கொடுத்தல்.



ஒரு விடயத்தை குழந்தை செய்யும்போது அதனை வெகுவாக பாராட்டும்போது குழந்தைகள் தனது திறமை மீது மிதமிஞ்சிய நம்பிக்கை கொண்டு தான் தோல்விகளை சந்திக்கும் போது அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் பொய் சொல்லுவார்கள். குழந்தை சித்திரம் ஒன்றை வரைந்து காட்டும்போது நன்றாக உள்ளது என வெகுவாக பாராட்டாமல் ''இது எனக்கு பிடித்துள்ளது  ஆனால் இந்த இடத்தில் இந்த நிறம் தீட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்'' எனக்கூறல். இதன் போது கருத்து வேறுபாடு இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மனப்பக்குவம் ஏற்படும்

குழந்தை தொடர்ந்து பொய் சொல்லிக்கொண்டு இருந்தால் ''நீ சொல்வது எனக்கு பிடிக்கவில்லை அது உண்மை இல்லை என்று எனக்கு தெரியும்'' என்றவாறு வழங்குங்கள் மாறாக ''நீ கெட்டவன் இப்படியே சொல்லிக்கொண்டு இருந்தால் உன்னை யாருக்கும் பிடிக்காது'' என்றவாறு அவர்களது சுயமதிப்பை பாதிக்கச் செய்யும் வார்த்தைகளை கூற வேண்டாம்.

மேலும் குழந்தை சிறிய விடயத்திற்கு உண்மை சொன்னாலும் அதனை பாராட்டுங்கள். சந்தோஷமாக உள்ளதாக கூறுங்கள்.



சிறிய குழந்தைகள் போய் சொல்லும்போது அதனை ஆரம்பத்தில் பெற்றோர் ரசிப்பது வழக்கம். அதனை நாம் வெளிப்படுத்தும்போது அவர்களது பொய்யின் அளவு விரிவாக சாத்தியம் அதிகம். எனவே சிறிய குழந்தைகளின் பொய்யை நாம் உள் மனதால் ரசித்தாலும் அதனை வெளிப்படையாக காட்டுதல் கூடாது.

உண்மையின் வலிமையையும் பொய்யினால் ஏற்படும் பாதிப்பையும் வெளிப்படுத்தும் moral stories சொல்லி கொடுத்தல்.



எமது வளர்ப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியும் தொடர்ந்து பொய் சொல்லும் பழக்கத்தை குழந்தை கைவிடாத போது தண்டித்தல் அவசியமாகும். இல்லாவிட்டால் குழந்தை மீதுள்ள நம்பிக்கை மற்றவர்களால் இழக்கப்படும் அதே வேளை குழு செயற்பாடுகளில் அவர்களால் பங்கு கொள்ள முடியாது போகும்.

www.drsanoosiya.blogspot.com.
2020.06.24

Wednesday, 17 June 2020

அன்பின் மொழிகள்


நாம் எமது குழந்தைகளிடம் எமது அன்பை வெளிக்காட்டுகிறோம். சிலவேளைகளில் அதனை குழந்தைகளால்  புரிந்துக்கொள்ள முடியவில்லை என நாம் கவலைப்படுவதுண்டு. காரணம் அன்பு என்பது ஒரு மொழியை போன்றது. ஒரு மொழியை பயன்படுத்தி எமது உணர்வுகளை ஒருவரிடம் வெளிப்படுத்தும் போது அதனை புரிந்துக்கொள்ள முடியுமானால் மாத்திரமே அது ஒரு ஆக்கப்பூர்வமான அனுபவமாக மாறும். அதே போலத்தான் அன்பும் அதன் மொழியை புரிந்துக்கொள்ள முடியாவிட்டால் முழுமையான அனுபவத்தை பெற முடியாது.

Gary Chapman என்பர் அன்பை ஒரு மொழியாக ஐந்து வகையான முறையில் புரிந்துக் கொள்ள முடியும் என்கிறார்.

பொருள் அளவில் அன்பை புரிந்துக் கொள்ளல் (Through gift)

இத்தகையோர் பொருள் அளவில் அன்பை பரிமாறிக்கொள்பவர்கள். தனது அன்பை பொருளாக மற்றவர்களுடன் பரிமாற எண்ணுவதுடன் மற்றவர்களின் அன்பையும் அதன் மூலமே எதிர்பார்ப்பவர்கள்.

இத்தகைய குழந்தைகள் தம்மால் முடிந்த சிறிய பரிசுப்பொருட்களை தனது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும் தனது அன்பை வெளிப்படுத்த வழங்குவார்கள். தாமும் மற்றவர்களிடமிருந்து தம்முடைய முக்கியமான நாட்களில் பரிசுப்பொருட்களை எதிர்பார்ப்பார்கள்.



வார்த்தைகள் (Words of appreciation) மூலம் அன்பை புரிந்துகொள்ளல்

தனது  அன்புக்குரியவர்களின் செயற்பாடுகள் பிடித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களது அன்பை பாராட்டுதல் மூலம் வெளிப்படுத்துவார்கள். அவர்களும் அதையே எதிர்பார்ப்பார்கள்.

உதாரணமாக தனது தாயின் சாரி அழகாக உள்ளது எனக் கூறல். தான் எதையாவது செய்த பிறகு தாயிடம் good சொல்லுமாறு கூறுதல் போன்றவைகளை குறிப்பிடலாம்.

இதன் போது  குழந்தைகளை திருப்திபடுத்துவதற்காக பொய் சொல்லுதல் கூடாது. மேலும்  வயதிற்கு ஏற்றபடி பாராட்டும் போதே அது ஆக்கபூர்வமான செயற்பாடாக அமையும். உதாரணமாக Teenage குழந்தையிடம் போய் 'நீ shoe lace கட்டியது  அழகாக உள்ளது' எனும்போது அது குழந்தைக்கு பகடியாக மாறிவிடும்.



செயற்பாடுகளின் (Act of service) மூலம் அன்பை புரிந்துக்கொள்ளல்.

இத்தகையோர் செய்யக்கூடிய வேலைகளில் அன்பை வெளிப்படுத்துபவர்கள். உதாரணமாக பொருட்களை தூக்கி கொடுப்பதன் மூலம் பெற்றோர்களுக்கு உதவி செய்து அன்பை வெளிப்படுத்துவார்கள். அவர்களும் தனது பெற்றோர் தான் Home work செய்யும்போது   தன்னுடன் உட்கார்ந்து  உதவி செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.


Quality time மூலம் அன்பை புரிந்துகொள்ளல்

தனக்கு பிடித்தமானவர்களுடன் கூடவே இருப்பதை ஆதரவு என நினைப்பவர்கள். இவர்கள் தனக்கு உதவி செய்ய வேண்டும் என எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால் தன்னுடன் கூட இருக்க வேண்டுமென எண்ணுவார்கள். 

குழந்தைகள் பெற்றோர்கள் வீடு வேலை செய்யும் போது அவர்களுக்கு உதவி செய்யா விட்டாலும் அவர்களுடன் கூடவே அமர்ந்திருப்பார்கள். அவர்களும் தனது பெற்றோர் மற்ற எதிலும் கவனம் செலுத்தாமல் தன்னுடன் செலவழிக்க வேண்டும் என எண்ணுவார்கள்.



தொடுகை (Touch) மூலம் அன்பை புரிந்துகொள்ளல்

இவர்கள்  வார்த்தைகள் மூலம் 'நான் உன்னுடன் அன்பாக உள்ளேன்' என எவ்வளவு கூறினாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அன்பை தனக்கு பிடித்தமானவரை கட்டிப்பிடிப்பதன் மூலம் கையை பிடித்துக் கொள்வதன்  மூலம்  உணர்பவர்கள். 
பாடசாலையில் ஆசிரியரின் புடவையை பிடித்துக்கொண்டு செல்வார்கள். 



குழந்தைகளை சில நாட்கள் கூர்ந்து கவனிப்பதன் மூலம்  அவர்களது அன்பின் மொழியை புரிந்து கொள்ள முடியும். அவர்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்  போல  அன்பை அவர்களிடம் வெளிப்படுத்தும்போது சிறந்த பாதுகாப்பையும் நம்பிக்கையையும் எம்மிடம் உணர்வார்கள். இது எமக்கும் குழந்தைகளுக்கும் இடையில் சிறந்த உறவு பாலத்தை ஏற்படுத்த வாய்ப்பாக அமையும்.
  
www.drsanoosiya.blogspot.com.
2020.06.17