Tuesday 2 August 2022

 

திறமைக்கான கல்வி பாடசாலைகளில் போதிக்கப்படுகின்றதா? 

கடந்த தசாப்தத்தில் புத்தள மண்ணில் ஏற்பட்ட கல்வி புரட்சி என்பது இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றிலேயே பதியப்பட்ட வேண்டிய சாதனை என்றே கூற வேண்டும்.

நாம் உயர்தரம் கற்கும் காலங்களை எடுத்தோமேயானால் ‘’விஞ்ஞான துறையா! அதுவும் புத்தளத்தில் கற்கப்போகின்றீர்களா? காலத்தையும் நேரத்தையும் வீணாக்காமல் வேறு துறையை தெரிவு செய்து முன்னேறப் பாருங்கள்!’’ என்று ஆங்காங்கே எமது காதுகளுக்கு வந்துச்சென்ற ஒலிச் சமிஞ்சைகள் இன்றும் நினையாத வடுக்கள்தான். அதன் பின் புத்தளத்தில் ஏற்பட்ட கல்வி புரட்சி அவ்வாறு சமிஞ்சை காட்டியவர்களை விலாசம் இல்லாமல் அழித்துச்சென்றது.

இந்தக் கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருக்க ஒரு தசாப்தத்தின் பின் எமது சமூகம் இன்று எதிர்நோக்கியுள்ள பாரிய சவால் பற்றி அலசுவதே இவ் ஆக்கத்தின் நோக்கம். படித்து என்ன பயன் வேலையில்லேயே. எனது தொழிலுக்கும் நான் படித்த படிப்புக்கும் சம்மந்தம் உள்ளதா? ஏன் எனக்கு எனது தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை? என்ற ஆதங்கத்துடன் கலந்த முணுமுணுப்புகள் ஆங்காங்கே இன்று பரவலாக கேட்கக்கூடியதாக உள்ளது.

இந்தியாவில் சிலகாலங்களுக்கு முன்னால் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு பிள்ளை எந்தத் துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதனை தீர்மானிப்பது  யார்? என்பதே அந்த ஆய்வு. அதன் முடிவு ஆச்சிரியத்துக்கு உடையதாக இருந்தது.பக்கத்து வீட்டு அம்மா என்பதே அதன் முடிவு. இது ஆச்சிரியமான முடிவு என்றாலும் இன்றைய சூழலை பொறுத்த வரையில் நிதர்சனமான உண்மையும் அதுவே. ஒருவர் ஒரு துறையில் அந்தஸ்து ரீதியிலும் பண ரீதியிலும் கொடிகட்டி பறக்கும் போது இனிப்பை நாடி பறக்கும் ஈக்களை போல எல்லோரும் அந்தத் துறையை நோக்கி ஓடுவது இன்று பரவலாக காணமுடிகின்றது. இதன் விளைவு வேலை இல்லாத பட்டதாரிகள் சங்கத்தை ஆங்காங்கே நிறுவ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

இறைவனால் படைக்கப் பட்ட ஒவ்வொரு மனிதனின் திறமையும் தனித்துவமானது.ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட முடியாது. 1983களில் வாழ்ந்த உளவியலாளர் Haward Gardener Multiple intelligent concept யை எமக்கு விட்டுச்சென்றார். அவர் கூறுவது என்னவென்றால் அறிவு என்பது ஒன்பது வகையானது.  Naturalistic, musical, Logical, Interpersonal, Existential, Bodily kinaesthetic, Linguistic, Intra personal, Spatial Intelligent என அவற்றை வகைப்படுத்துகின்றார். நீங்கள் ஒன்பது வகைக்கும் வாய்ப்பை உங்கள்குழந்தைகளுக்கு கொடுத்தால்,  எந்த intelligent  அவர்களிடம் பலம் வாய்ந்ததாக உள்ளதோ அது மிகவும் பலம் வாய்ந்ததாக விருத்தி அடையும். எந்த intelligent சாதாரணமாக அல்லது பலவீனமாக உள்ளதோ அதனையும் விருத்தி அடையச்செய்யலாம். ஆனால்  அதில் நிபுணத்துவம் அடைய முடியாது.

உதாரணமாக Interpersonal Intelligentயை எடுத்தோமேயானால் மற்றவர்களை புரிந்துக்கொண்டு சிறந்த தொடர்பை ஏற்படுத்தக் கூடியவர்கள். தேர்ச்சிப் பெற்ற அரசியல்வாதிகளாக, ஆசியர்களாக, சமூக தொண்டர்களாக உருவெடுப்பார்கள்.

அதேபோல Bodily kinaesthetic Intelligentயை பெற்றோர் உடலியல் திறன் கொண்டவர்கள். விளையாட்டு வீரர்களாக, சத்திர சிகிச்சை நிபுணர்களாக உருவாகுவார்கள். Interpersonal Intelligent-மார்க்கத்தொண்டர்கள், உளவியலாளர்கள். Linguistic Intelligent-எழுத்தாளர்கள், கவிஞர்கள். Spatial Intelligent-மாலுமிகள் விமானிகள்…

இந்த கொள்கையைத்தான் உலகில் கல்வித்திட்டத்தில் முன்னிலை வகிக்கும் நாடுகள் இன்று பின்பற்றி தனது குழந்தைகளை உலகை ஆளும் வர்க்கமாக மாற்றுகின்றனர்.

உதாரணமாக இஸ்ரேல் நாட்டை  பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகிலேயே வெறும் இரண்டரை கோடி மக்களை கொண்ட இந்த யூத வர்க்கமே  உலகையே ஆட்டிப்படைக்கும் வர்க்கமாக இன்று வரை காணப்படுகின்றது. இவர்களது புலனாய்வு துறையான மொசாட் நிறுவனம் உலகில் செய்து முடித்த, செய்து கொண்டிருக்கின்ற கைங்கரியங்களை எழுத்துக்களால் எழுதி முடிக்க முடியாது. வெறும் இரண்டரை கோடி மக்களை உலகில் கொண்ட இவர்களில் நோபல் பரிசு வென்றவர்கள் 190 பேருக்கும் அதிகம். இஸ்ரேல் நாட்டில் வாழும் ஒன்றரை கோடி யூத மக்களிலே 20-30 இலட்ச விஞ்ஞானிகள் உள்ளார்கள் என கணக்கெடுப்புகள் கூறுகின்றன. 99 வீதமான மக்கள் ஹீப்ரு, அரபு மற்றும் ஆங்கிலம் சரளமாக கதைப்பார்களாம். 90 வீதமான மக்கள் 5 மொழி கதைக்கக் கூடியவர்கலாம். 

இந்த அளவு  புத்திசாலிகளாக யூதர்கள் இருப்பதற்கு காரணம்  அவர்களது நிபுணத்துவம் வாய்ந்த கல்வி திட்டமே   என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 3-12 வயதெல்லைக்குள் குழந்தையின் திறமை எந்த துறையில் உள்ளது என்பதனை கண்டு பிடிப்பதில் இஸ்ரேலியர்கள் வல்லவர்கள். திறமையை கண்டு பிடித்ததன் பிற்பாடு அந்தக்குழந்தையை அந்தத் துறையில் மட்டுமே வழிகாட்டுகின்றனர்.

உதாரணமாக ஒரு குழந்தைக்கு விவசாயத்தில் ஆர்வம் உள்ளது என்பதனை ஐந்து வயதில் இனங்கண்டு கொள்வார்களானால் அதன் பின் அந்த குழந்தையை அந்த துறையிலேயே வழி நடத்திச் செல்வார்கள்.இவ்வாறு விவசாயத்தில் ஆர்வமுள்ள குழந்தையை சுமார் 20 வருடங்கள் தாவரங்களுடனும் மண்ணுடனும் ஒன்றினையச்  செய்வோமாயின் 25 வயதில் அந்தக்குழந்தை அந்தத் துறையில் விஞ்ஞானியாகுவதும் 40 வயதில் நோபல் பரிசு பெறுவதும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.

அதனால்தான் சுவாமி விவேகானந்தர் கூறினார் 'புத்தகம் படிப்பது படிப்பில்லை. உங்கள் குழந்தைகளின் உள்ளிலுள்ள திறமைகளை வெளிக்கொணர்வதே உண்மையான கல்வி' என்று.

அன்று 13 வயது சிறுவனாக இருந்த Bill Gates தனது தாயிடம் கூறினான். ‘’தாயே! எனக்கு computer programmeயில் ஆர்வம் இருக்கின்றது அதில் புரட்சி செய்யப் போகின்றேன்’’ என்று. அவன் மனதில் ஏற்பட்ட திறமையுடன் கூடிய கடின உழைப்புத்தான் Microsoft  நிறுவனத்தை உருவாக்கி  அவரை உலக பணக்காரன் ஆக்கியது.

ஆகவே மாணவனே! உனது திறமையை சரியான விதத்தில் இனங்கண்டு அதை நோக்கி கடினமாக உழைப்பாயானால் டாக்டர் என்ன! இன்ஜினியர் என்ன! உன்னால் ஒரு Bill Gates ஆக அப்துல் கலாமாக  புத்தள மண்ணிலும் உதித்துவிட்டுச் செல்லலாம்.

உன்  திறமைக்குள்  ஆன்மீகத்தை மெல்ல கலந்துவிடுவாயாயின் இந்த நாஸ்திகர்கள் என்ன! இவர்களை விட பல மடங்கு உயரத்தில் உனது அந்தஸ்து ஈருலகிலும் உயர்ந்துச்செல்லும்.

டாக்டர் சனூஷியா மஹ்மூத்

புத்தளம்.

20.02.2020

 

 தொழில் பார்க்கும் பெற்றோர்களும் குழந்தை வளர்ப்பும்.

சமகாலத்தில்  தொழில் பார்க்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதேவேளை அவர்களது குடும்பவியலில் ஏற்பட்டுள்ள பிரதான பிரச்சினை குழந்தைகளை வளர்ப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் ஆகும். குழந்தைகள் பெற்றோர்களின் போதிய அரவணைப்பை இழந்து தவிக்கும் அதேவேளை, தனது குழந்தைகளை சரியான விதத்தில் கவனிக்க முடியவில்லை என்ற குற்ற உணர்வுக்குள் அகப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகும் பெற்றோர்களையும் இன்று சர்வசாதாரணமாக காணக்கூடியதாக உள்ளது. இந்த மன உளைச்சலுக்கு அதிகம் அகப்பட்டு தனது தொழிலையும் கைவிட்டுச் செல்லும் பெற்றோர்களும் உண்டு.

பெற்றோர்கள் தமது நேரத்தை வினைத்திறனாக பயன்படுத்த கற்றுக்கொள்ளும் போது, தமது குழந்தைகளுடன் செலவிடக்கூடிய காலத்தை அதிகரிக்க முடியும் என்பது வெளிப்படையான உண்மையாகும். சமூக வலைத்தளங்களினூடாக குடும்பவியலுக்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கும் ஒரு ஆங்கிலேய பெண்ணின் குடும்பவியலுக்கான நேர முகாமைத்துவ குறிப்புக்கள் காத்திரமானவை என்பதனால் அதனை இங்கு பகிரலாம் என எண்ணுகின்றேன்.

ஒருநாளின் ஆரம்பித்திலேயே அந்த நாளை திட்டமிடல்

ஒரு நாளுக்கான வேலைகளை திட்டமிடலுடன் ஆரம்பிக்கும்போது வினைத்திறனாகவும் அதேவேளை விரைவாகவும் செய்து முடிக்க ஏதுவாகின்றது.

குழந்தைகள் தூங்கும் காலத்தை எமது ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தல்.

குழந்தைகள் தூங்கும் நேரத்தில்  எமது தேவைகளை திட்டமிட்டு செயற்படுத்தும் போது அவர்கள் விழித்திருக்கும் காலத்தை அவர்களுடன் முழுமையாக செலவழிக்க வாய்ப்பாக அமையும்.

சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகுவதை இயன்றளவு தவிர்த்தல்.

வீட்டு வேலைகளில் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரையும் ஈடுபடச்செய்தல்.

அநேகமான இடங்களில் ஒரு பெற்றோர் தனது அலுவலக வேலைகளில் அதிகம் ஆர்வம் காட்டும் அதேவேளை மற்றவர் மீது முழு குடும்பப் பொறுப்பையும் சுமத்துவதை எம்மால் காணமுடிகின்றது. தொழிலுக்கும் குடும்பவியலுக்கும் இடையில் சமத்துவம் பேணப்படாத வரை ஆரோக்கியமான குடும்பத்தை கட்டியெழுப்ப முடியாது. எனவே ஆரம்பத்திலிருந்து பெற்றோர்கள் இருவரும் கலந்தாலோசித்து குடும்பப் பொறுப்புகளில் சமநிலையை மேற்கொள்வது அவசியமாகும்.

குழந்தைகளை பொறுத்தவரையிலும் சிறிய வயதிலிருந்தே chore rota உருவாக்கி அவர்களது வயதிற்கு ஏற்ற வகையில் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தும் போது அவர்களது பொறுப்புணர்வை வளர்க்க சிறந்த வாய்ப்பாக அமையும்.

தன்னை கவனிப்பதற்கு  நேரத்தை ஒதுக்குதல்

தமது அடிப்படை தேவைகளை சரியான முறையில் பூர்த்தி செய்யாமல் குழந்தை பராமரிப்பில் முழுமையாக ஈடுபடும் போது மன அழுத்தங்களுக்கு உள்ளாக்குவதற்கான வாய்ப்பு அதிகமாகும். எனவே எமக்கு நாமே ஓய்வெடுத்து கொள்வதும் இடைக்கிடையே வெளி இடங்களுக்கு சென்று நண்பர்களை சந்தித்தல் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் போது ஆரோக்கியமான குடும்ப பிணைப்பை ஏற்படுத்துவதற்கான மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

குழந்தைகளை பிரிந்து அதிக நேரம் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் சில பெற்றோர்கள் தமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்  குழந்தைகளை திருப்திபடுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களை வெளியே கூட்டிச்சென்று கேட்கும் எல்லா பொருட்களையும் வாங்கிக் கொடுப்பதை காண்கிறோம். இதுவும் குழந்தை வளர்ப்பில் பிழையான அணுகுமுறையாகும். குழந்தைகளை பொறுத்த வரையில் எமது அன்பை பொருள் அளவில் நீண்ட தூரம் திருப்திப்படுத்த முடியாது.

ஆகக் குறைந்தது இருபது நிமிடங்களாவது குழந்தைகளுடன் High quality time செலவழிக்கும் போது அவர்களுக்கும் எமக்கும் உண்டான உறவை வலுப்படுத்த முடியும் என சில குழந்தை உளவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த நேரம் குழந்தைகளை முற்றாக சுவாரஷ்யப்படுத்தும் நேரமாக இருத்தல் வேண்டும். இதன்போது அவர்களது குறைகளை இனங்கண்டு திருத்தும் நேரமாகவோ கல்வி விடயம் சம்பந்தமாக வினவும் நேரமாகவோ இல்லாமல் அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டை அவர்களுடன் முழுமையாக இணைந்து விளையாடுதல் போன்றவற்றை குறிப்பிடலாம். இது நமது பெற்றோர்கள் நமக்காக எதையும்செய்ய முனைந்தவர்கள் நாம் அவர்களுக்கு முக்கியமானவர்கள் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.

மற்றும் குறைந்தது ஒரு வேளை சாப்பாட்டையாவது குழந்தைகளுடன் குடும்பமாக இணைந்து உண்பது, பின்னர் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவுதல், இடத்தை சுத்தப்படுத்துதல் போன்ற விடயங்களை ஒன்றாக இணைந்து செயற்படுத்தும் போது எவ்வளவு நாம் பிசியாக இருந்தாலும் எல்லோரும் ஒன்றாக உள்ளோம் என்ற உணர்வை ஏற்படுத்தும்.

சிலவேளைகளில் எமது பலவீனத்தை குழந்தைகள் இனங்கண்டு  கொண்டு தமது விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக குற்ற உணர்வை அவர்களே வளர்ப்பார்கள். உதாரணமாக தனது நண்பரின் அம்மா ஒவ்வொரு நாளும் பூங்காவிற்கு கூட்டிச்செல்கின்றார் நீங்கள் கூட்டிச்செல்வதில்லை என்று கூறும்போது அம்மா சாக்லேட் வாங்கித்தருவார் என்ற புரிதலுடன் உள்ள குழந்தை அதனை திருப்பித் திரும்பி சொல்லிக்காட்டும். இங்கு நாம் அவர்களுடைய வலைக்குள் சிக்கிவிடாமல் குறிப்பிட்ட நாளில் நான் கூட்டிச் செல்கின்றேன் என்று வாக்குறுதி வழங்குவதுடன் அந்த வாக்குறுதியை மீறாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வாக்குறுதியை பொடுபோக்காக விடும் போது குழந்தை நம்மீதுள்ள நம்பிக்கையை இழந்து விடும்.

இறுதியாக இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் இருவரும் தூர இடங்களில் தொழில் பார்க்கும் பெற்றோர்களிடத்தில் பரவலாக எதிர்நோக்கும் பாரிய சவால்களில் ஒன்று single parenting எனப்படும் ஒரு பெற்றோருடனான தனிமைப்படுத்தப்பட்ட குழந்தை வளர்ப்பு ஆகும். இதன்போது ஒரு பெற்றோர் முழு குழந்தை வளர்ப்பையும் உள்வாங்கிக்கொண்டு பல மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர்.

 

இத்தகையவர்கள் சமூகத்தில் தமது வளர்ச்சியை மாத்திரம் எதிர்பார்ப்பவர்களுடன் தொடர்புகளை மேற்கொள்வதோடு நச்சுக் கருத்துக்களை வெளியிடும் நபர்களுடன் தொடர்புகளை இயன்றளவு குறைத்துக்கொள்ளல் எமது மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கான சிறந்த வழிமுறையாகும். மேலும் குறுகிய அல்லது நீண்ட விடுமுறையில் வீட்டுக்கு வரும் மற்றைய பெற்றோர் வீட்டில் உருவாக்கப்பட்ட ஒழுக்க நடைமுறைகளை மீறாத வகையில் தமது நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ளல் அவசியமாகும். உதாரணமாக குழந்தைகள் தூங்கும் நேர ஒழுங்கு போன்றவையை குறிப்பிடலாம்.

06.06.2020

F. Sanoosiya Mahmoodh

Medical officer, Base Hospital Mallavi