Tuesday 19 May 2020

குழந்தைகளுக்கு அல் குர்ஆனை எவ்வாறு கற்றுக்கொடுக்கலாம்?




உங்களில் சிறந்தவர் அல் குர்ஆனை தானும் கற்று மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுப்பவரே என்பது நபிமொழியாகும்(புகாரி).  இதனால்தான்  அல் குர்ஆனிய குழந்தைகளை உருவாக்குவது என்பது அநேக பெற்றோர்களின் கனவாக உள்ளது. இந்த கனவை நனவாக்கிக் காட்டிய, முழு குர்ஆனையும் ஏழு வயதிற்குள் மனப்பாடம் செய்த இரண்டு குழந்தைகளின் தாயான Sister Shabnam அவர்கள் தனது வாழ்க்கை பதிவேட்டை நமக்கு ஆலோசனையாக வழங்குகின்றார்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக அல் குர்ஆனை  கற்றுக்கொள்ளல் 

அல் குர்ஆனை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டுமென்றால் நீங்கள் அதனை முதலில் கற்றுக்கொள்ளுங்கள் என்பது அவரது முதல் ஆலோசனையாகும். நாம் எதனை குழந்தைகளிடம் எதிர்பார்க்கின்றோமோ அதனை முன்மாதிரியாக நின்று அவர்களுக்கு செய்து காட்டுவதே இருப்பதிலேயே சிறந்த வழிமுறையாகும். எனவே தப்ஸீர் தஜ்வீத் கலையை கற்றுக்கொள்ளல் மற்றும் நாமும் குர்ஆனை மனப்பாடம் இடும் பயணத்தில் இணைந்து கொள்ளல் அவசியமாகும்.



குழந்தைகள் அல் குர்ஆனை கற்றுக்கொள்ளும் முறையை புரிந்துக்கொள்ளல்

குழந்தைகள் ஒரு விடயத்தை மூன்று வகையான விதத்தில் புரிந்துகொள்கின்றனர். 

Aural learners

இவர்கள் ஒரு விடயத்தை கேட்டல் புலன் மூலம் புரிந்துக்கொள்பவர்கள். இவர்கள் மற்ற முறைகளை பயன்படுத்துபவர்களை விட சிறப்பானவர்கள். காரணம் எந்த ஒரு முயற்சியுமின்றி வெறும் கேள்விப்புலன் மூலம் கற்றுக்கொள்கின்றனர். இவர்கள் விளையாடும் போது அல்லது வரைதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் போது குர்ஆனிய வசனங்களை கேட்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கலாம். மேலும் நாம் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கலாம். இதன் மூலம் இலகுவில் குர்ஆனை கற்று மனப்பாடம் செய்வர்.  

Visual learners

ஒரு விடயத்தை பார்ப்பதன் மூலம் கற்றுக் கொள்பவர்கள். குர்ஆன் ஆயத்தை விரல்களினால் சுட்டிக்காட்டி ஓதிக் காண்பிப்பதன் மூலம் மனப்பாடம்  செய்ய அனுமதிக்கலாம்.பெரிய குழந்தைகளை பொறுத்தவரையில் மனப்பாடம்   செய்யும் வசனத்தை அவர்களது  கைகளினாலேயே எழுதுவதன் மூலம் கற்றுகொள்ளச் செய்யலாம். ஒரே குர்ஆனை மனப்பாடம் செய்யும் முழுப் பயணத்திற்கும் பயன்படுத்துவதன் மூலம் காட்சி (Picture memory) ஒன்றை அதில் உருவாக்கி மனப்பாடம் செய்வார்கள். அழகிய உறைகளை இட்டு அவர்களுக்கு வழங்கும் போது  குர் ஆனுடனான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும்.

Kinesthetic learners

ஐந்து வயதிற்கு குறைவான சிறிய குழந்தைகள் பொதுவாக புது விடயங்களை புரிந்துக்கொள்ள  இந்த முறையையே கையாள்கின்றனர். அதாவது கைகளை பயன்படுத்தி விளையாடுவதன் மூலம், அனுபவங்களின் மூலமும், உருவமைக்கப்பட்ட சிறு விளையாட்டுப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் புரிதலை மேற்கொள்கின்றனர்.

உடற்பாகங்களின் அசைவுகள் மூலம் முகப்பவனைகள், சைகைகள் மூலம் இவர்கள் அல் குர்ஆனை கற்றுக்கொள்கின்றனர். 

உதாரணமாக திருப்தி என்பதற்கு பெரு விரலை உயர்த்தி காட்டுதல். வேண்டாம் /இல்லை என்பதற்கு சுட்டு விரலை அசைத்துக் காட்டுதல் போன்றவையை  பயன்படுத்துவதாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.



அல் குர்ஆனை குறைந்த வயதெல்லையில் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தல்.

ஒவ்வொரு  குழந்தையின் ஆற்றலும் தனித்துவமானது. ஒரு குழந்தையின் ஆற்றலை இன்னொரு குழந்தையுடன் ஒப்பிட முடியாது. சில குழந்தைகள் ஆரம்ப வயதெல்லையில் கதைக்க ஆரம்பித்து விடுவார்கள். சிலருக்கு அவ்வயதெல்லை பின்னோக்கிச் செல்லும். குழந்தைகளின் ஆற்றல் மற்றும் நமது முயற்சி என்பவற்றை பொறுத்து அல் குர் ஆனை 2-10 வயதெல்லைக்குள் முழுமையாக மனனமிடச் செய்யலாம் என்பது ஆசிரியரின் கருத்தாகும்.

அதே நேரத்தில் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ற வகையில் எதிர்பார்ப்பது அவசியமாகும். குழந்தை எந்த வயதை அடைந்திருந்தாலும் மனனம் செய்வதற்கு உற்சாகப்படுத்தலாம். இதற்கு வயதெல்லை என்று ஒன்று கிடையாது. 80 வயது மூதாட்டியும் குர் ஆனை மனனமிட்ட வரலாறுகள் உள்ளன.

அவரது குழந்தை 5 வயதில்  Qa’eda stage  ஆரம்பித்ததாகவும் இதன்போது juz amma வில் சிறிய சூராக்களை மனனமிட ஆரம்பித்ததாகவும் குறிப்பிடுகின்றார். பின்னர்  வெறும் இரண்டு மாதங்களில் வெளித் தூண்டுதல் எதுவுமின்றி juz amma வின் எல்லா சூராக்களையும் மனனமிட்டது. இந்த கட்டத்தில் தான் முன்னின்று அல் குர்ஆனை கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தேவையை உணர்ந்ததாக குறிப்பிடுகின்றார். எனவே அவர் வீட்டில் அல் குர் ஆனை கற்றுக் கொடுக்கவும் hifdh பண்ணவும் உதவ ஆரம்பித்தார். மேலும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை ஏற்பாடுசெய்து குழந்தையின் tajweed மற்றும் makhaarij என்பவற்றை செம்மைப்படுத்தியதாக குறிப்பிடுகின்றார்.  


குழந்தைகளுடன் பெற்றோர்களும் இணைந்து செயற்படல்

''குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான இணைப்பை விட பெற்றோர்களுக்கு இடையிலான இணைப்பு பலமானது. எனவே ஒரு பிரபலமான மதுராசாவில் குழந்தையை சேர்த்தவுடன் அவர் hafidh ஆகி விடுவார் என்று கிடையாது. மாறாக வீட்டில் நாம் வழங்கும் முயற்சி அத்தியாவசியமானது.  ஆகவே நான் ஒவ்வொரு நாளும் 10-15 நிமிடங்கள் குழந்தையுடன் அமர்ந்து அன்று மதுராசாவில்  கற்ற பாடத்தை குழந்தையுடன் சேர்ந்து சரி பார்ப்பேன். மேலும்  வீட்டில் கற்றார் என்பதை சுட்டிக்காட்டி அந்த பக்கத்தின் மூலையில் அடையாளம் இடுவதோடு அதனை சரி பார்க்குமாறு ஆசிரியருக்கும் ஒரு குறிப்பு எழுதுவேன்'' என்கிறார் ஆசிரியர்.


கற்றவற்றை இயன்றளவு மீள் பரீட்சித்தல்

''நான் ஒரு ஆயத்தை ஓதிக் காண்பிக்கும் போது அதனை குழந்தை திரும்பிச் சொல்லும். இவ்வாறு குறைந்தது 7 முறை மீண்டும் மீண்டும் மீள் பரீட்சிப்போம். இது நீண்ட காலம் ஞாபகத்தில் வைத்திருக்க சாத்தியமாக இருந்தது. பிறகு குறிப்பிட்ட பக்கத்தை மறைத்துக் கொண்டு ஏறத்தாழ 5 தடவை திரும்பிச் சொல்லுமாறு வேண்டினேன். இவ்வாறு  ஆரம்பித்த அல் குர்ஆனுடனான பயணத்தில் நாளுக்கு நாள் முன்னேற்றத்தை என்னால் காண முடிந்தது

மேலும் நீண்ட ஆயத்துக்களை சிறு சிறு பகுதிகளாக பிரித்து மனனமிட்டோம். எமது நேரத்தை இரண்டு பகுதிகளாக பிரித்து ஒரு பகுதியை ஏற்கனவே மனமிட்ட ஆயத்துக்களை ஞாபகப்படுத்துவதற்காகவும் மற்றைய பகுதியை புதிய ஆயத்துக்களை ஞாபகப்படுத்துவதற்காகவும் பயன் படுத்தினோம். இதற்காக ஒரு நாளின் 15- 30 நிமிடங்களை செலவழித்தோம்.

எந்த முறையை பயன்படுத்தி குழந்தை கற்றாலும் ஒவ்வொரு நாளும் இரவில்  படுக்கைக்கு செல்லும் முன் திரும்பி ஒரு முறை ஞாபகப்படுத்துவதை ஒரு வழக்கமாக வைத்திருந்தோம்.'' என்கிறார் ஆசிரியர்.


தொடரும்......  
www.drsanoosiya.blogspot.com.
19.05.2020

Tuesday 12 May 2020

குழந்தைகளை எவ்வாறு தொழுகைக்கு தயார்படுத்தலாம்?




''நான் எனது நண்பியுடன் காரில் சென்றுக்கொண்டிருக்கும்போது என்னுடைய கையடக்க தொலைபேசி ஒலித்தது. ஒலிபெருக்கியில் அந்த அழைப்புக்கு மறுமொழியளித்தேன். மறுபக்கத்தில் எனது 18 வயது மகன் இவ்வாறு அழைத்தான்....  

என்னை பாடசாலையிலிருந்து மூன்று மணிக்கு முன்னால்  வந்து கூட்டிச்செல்லுங்கள். ளுஹர் தொழுகையை நான் miss பண்ண விரும்ப இல்லை'  என்று.

ஒன்றுக்கு இரண்டு முறை 'நான் நேரம் சென்று வரமாட்டேன்' என வாக்குறுதி அளித்த பிற்பாடே  அவரது  தொலைபேசி அழைப்பை துண்டிக்க முடிந்தது. எமது உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த நண்பி ''எவ்வாறு உன்னால் தொழுகைக்கு இந்த அளவு முக்கியத்துவம்  வழங்கும்  குழந்தையை உருவாக்க முடிந்தது என்று நீ எனக்கு சொல்லியே ஆக வேண்டும்'' என்றார். 'எல்லாம் அல்லாஹ்வின் கிருபையினால் ஏற்பட்டது' என சுருக்கமாக பதிலளித்தேன். இந்த பதிலில் அவர் திருப்தி அடையவில்லை என்பது அவரது முகப்பாவனையில் புரிந்துக்கொண்டேன். இதற்கும் மேலதிகமாக அவர் எனது வாழ்க்கையில் இதற்காக பயன்படுத்திய உத்திகளை எதிர்பார்ப்பதை உணர்ந்துக்கொண்டேன்''

இது Parenting expert Hina Khan-Mukhtar அவர்களின் வாழ்க்கை அனுபவமாகும். அவர் குழந்தை வளர்ப்பில், தொழுகையை தனது குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திய விதம் அற்புதமானவை. அவையாவன  

1.ஏழு வயது வரைக்கும் தொழுகையை கடைபிடிக்குமாறு எந்தவித அழுத்தத்தையும் வழங்காதிருத்தல்.

தனது குழந்தை சிறு வயதிலிருந்தே தொழுகையின் சுவையை உணர்ந்துக் கொள்ள வேண்டுமென்ற அவாவில் அநேகமான பெற்றோர்கள், தாம் தொழும்போது குழந்தைகளை வற்புறுத்தி தொழுமிடத்தில் வைத்திருப்பதையும், தொழாவிட்டால் மலக்குகள் உன்னை கெட்ட பிள்ளை என எழுதிவிடுவார்கள்,  அல்லாஹ் உன்னை விரும்பமாட்டான் என்று கூறுவதையும் நான் அவதானித்துள்ளேன். அவர்களது நோக்கங்கள் தூய்மையானதாக இருந்தாலும் படைத்தவன் ஒரு நோக்கத்துடனேயே ஏழு வயது வரை குழந்தைகளுக்கு தொழுகையை கடமையாக்கவில்லை என்பதை நான் உணர்கின்றேன். எனவே ஏழு வயது வரைக்கும் எனது குழந்தைகளுக்கு  விரும்பினால் தொழுவதற்கும் தொழாமல் இருப்பதற்கும் பூரண சுதந்திரத்தை வழங்கினேன்.


2.குழந்தை தொழுகையை ஆரம்பிக்கும் நாளை என்றும் ஞாபகத்தில் வைத்திருக்கும் வகையில் கொண்டாடுதல்.

எனது குழந்தை ஏழு வயதை அடைந்த போது வாழ்த்து அட்டைகளை வாங்கி அதனை எனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பகிர்ந்தளித்தேன். அதில் குழந்தைகளின் வயதிற்கு ஏற்றாற் போல தொழுகை சம்பந்தமான விடயங்களையும்   அவர் தொழ  ஆரம்பிப்பதற்கான வாழ்த்தையும்  தெரிவித்து எழுதி குழந்தையிடம் வழங்குமாறு வேண்டினேன். இதன் பிரதான நோக்கம் குழந்தையை தொழுகைக்கு உற்சாகப்படுத்துவதாக இருந்தது.

இதேபோல எனது நண்பி ஒருவர் அவரது குழந்தைக்காக ''salah party'' என்ற வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தார். அங்கு பலவகையான இனிப்புப் பண்டங்கள் பரிமாறபட்டதுடன் தொழுகையை மையப்படுத்தி விளையாட்டுக்களும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. மேலும் வைபவத்தின் இறுதியில் ''Prayer chart'' வழங்கப்பட்டது. அதில் ஒரு நாளைக்கு எத்தனை தடவை தொழவேண்டுமென்ற தகவல்கள் வழங்கப்பட்டிருந்தது.


3.தொழுகையையை படிப்படியாக அறிமுகப்படுத்தல்.

குழந்தை ஏழு வயதை அடைந்தவுடன் ஒரு நேரத்தொழுகையை நிறைவேற்றுவதற்கு தெரிவு செய்யுமாறு வினவினோம். அவர் 'Maghrib' தொழுகையை தெரிவு செய்தார். காரணம் அந்த நேரம் அவரது தந்தை வேலை முடித்து வரும் நேரமாக இருந்தது. அவருடன் இணைந்து கூட்டுத்தொழுகை நிறைவேற்ற ஆசைப்பட்டார்.

''மற்ற பர்ளான தொழுகைகளை நீங்கள் விரும்பினால் தொழுது கொள்ளுங்கள் ஆனால் 'Maghrib'  தொழுகையை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கைவிட வேண்டாம். உதாரணமாக நீங்கள் விளையாடிக்கொண்டோ அல்லது கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டு இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி தொழுது கொள்ளுங்கள்.'' என்று தெளிவான அறிவுரை வழங்கினோம். இந்த  விடயத்தை சுமார் ஒரு வருடங்கள் நடைமுறைப்படுத்தினோம். 

இதில் குழந்தை பழக்கப்பட்ட பிறகு இரண்டாவது தொழுகையை அறிமுகப்படுத்தினோம். இதனை சுமார் 6 மாதங்கள் செயற்படுத்தினோம். பின் மூன்றாவது தொழுகையை அறிமுகப்படுத்தினோம். இவ்வாறுஅல்லாஹ்வின் உதவியுடன் 9 1/2 வயதில் குழந்தை 5 நேர தொழுகைகளையும் பின்பற்ற பழகிக்கொண்டார். 10 வயதிற்கு அப்பால் சுன்னத்தான தொழுகைகளை தொழ ஆரம்பித்தார். Star stickers, Calendarயில் ஓட்டுவதன் மூலம் அவர்களது செயற்பாட்டை ஊக்குவித்தோம்.


4.நபிகளாரின் சீராவிலிருந்து தொழுகைக்கு நமது முன்னோர்கள் கொடுத்த முக்கியத்துவத்தை எடுத்தியம்புதல்.  

நபிகளார் மற்றும் அவர்களது தோழர்கள் போர்க்களத்தின்  மத்தியிலும், கடுமையான நோயால் பீடிக்கப்பட்ட நிலையிலும், மரணத்தின் இறுதி தருவாயிலும், எதிரிகளால் சித்திரவதைக்கு உள்ளான நிலையிலும் தொழுகையை கைவிடாத வரலாற்றை சொல்லிக் கொடுத்தோம். இறையச்சம் உள்ளவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தொழுகையை கை விடமாட்டார். என்ற உண்மையை அவர்களுக்கு புரிய வைத்தோம்.


5.தொழுகையின் நோக்கத்தை புரியவைத்தல்.

'படைத்தவனுக்கு தனது அடியான் மீது எவ்வித தேவையும் இல்லாத போதும் அடியானை படைத்ததன்  நோக்கம் அவனை வணங்குவதற்காவே உள்ளது' என்ற உண்மையை அவர்களின் வயதிற்கு ஏற்ற வகையில் விளக்கப்படுத்தினோம். இது வைத்தியர் வழங்கும் Prescriptionயை நோயாளிகள் அவரின் மீது பூரண நம்பிக்கை வைத்து பின்பற்றுவது போல ஒன்றாகும்.

தொழுகையின் ஒவ்வொரு இருப்புக்களின் நோக்கத்தையும் தனித்தனியாக விளக்கப்படுத்தினோம். உதாரணமாக ருகூஹ் அது அரசனுக்கு முன்னால் அடிபணியும் நிலை என்பதனையும், முதல் மனிதனை படைத்த அல்லாஹ் ஷைத்தான் அவருக்கு அடிபணிய மறுத்த வரலாற்றை இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்தினோம்.


6.தொழுகைக்கான சிறந்த சூழலை உருவாக்கிக் கொடுத்தல்.

 தொழுகைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் நண்பர் மற்றும் உறவினர் வட்டத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்தி கொடுத்தோம். உண்ணுவது குடிப்பது போல சாதாரணமாக நாளாந்தம் தொழுகையையும் தவறாமல் கூட்டுத்தொழுகை மூலம்  பின்பற்றும் ஒரு சமூகத்தை பார்த்து எனது குழந்தைகள் வளர வாய்ப்பு ஏற்பட்டது.

மேலும் எமது வாகனத்தில் 'Prayer pack' என்ற ஒன்றை எப்போதும் ஒவ்வொருவருக்கும் தயாராக இருக்கும் வகையில் வைத்திருந்தோம். அதில் 
  • சுத்தமான தொழுகை விரிப்பு
  • வுழு செய்வதற்கான தண்ணீர் நிரப்பிய போத்தல்
  • இயற்கை கடன்களை (Toilet) முடித்த பிறகு மறைவான பாகங்களை கழுவுவதற்காக விஷேடமாக வடிவமைக்கப்பட்ட தண்ணீர் நிரப்பிய போத்தல் (Squeeze bottle)
  •  கிப்லாவின் திசையை இலகுவில் அறிந்துக்கொள்ள திசைகாட்டி
  • விஷேடமாக தொழுகையின் போது பெண்களின் பாகங்களை மறைப்பதற்கான உடைகள்.
  • எமது கைகளில் Smart phone இல்லாத காலத்தில் ஒவ்வொரு மாதத்திற்கான தொழுகை நேர அட்டவணையையும் வைத்திருந்தோம். 
பிள்ளை பாடசாலை கொண்டுசெல்லும் பையிலும்  'Prayer pack' ஒன்றை விஷேடமாக தயாரித்து கொடுத்தோம். பாடசாலையிலும் நானும் கணவரும் முதலில் சென்று குழந்தைக்கு தொழுகைக்கான இடத்தை தயார்படுத்திக்கொடுக்குமாறு அதிபரிடம் வேண்டினோம். 


இதேபோல எனது நண்பி ஒருவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் தனது குழந்தைக்காக 'Prayer corner' என்ற  விசேடமான இடத்தை தொழுகைக்காக உருவாக்கி இருந்தார். அங்கு குழந்தைக்காக விஷேடமாக உருவாக்கப்பட்ட தொழுகை விரிப்பு மற்றும் அழகிய குர்ஆனுடன் கூடிய மேசை என்றவாறு அந்த இடத்தை அழகுபடுத்தி இருந்தார். இது அக்குழந்தையை தொழுகையின் பால் ஈர்ப்பதற்காக சிறந்த சூழலை வழங்கியது.


7.வீட்டிலுள்ள பெரியார்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக தொழுகையை நிலைநாட்டல்

எமது செயற்பாடுகளை எம்மோடு இருந்து கூர்ந்து கவனிப்பவர்கள் எமது குழந்தைகளே. எமது தொழுகையில் பொடுபோக்காக இருந்து விட்டு குழந்தைகளை சிறந்த தொழுகையாளிகளாக மாற்றியமைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.


Reference- seekersguidance.org







Friday 8 May 2020

குழந்தைகளுக்கு அல்லாஹ்வை எவ்வாறு அறிமுகப்படுத்தலாம்?


குழந்தைகளுக்கு அல்லாஹ்வை அறிமுகப்படுத்தல் என்பது பெற்றோர்களை பொறுத்தவரையில் பாரிய இலக்குகளில் ஒன்றாகும். துரதிஷ்டம்  என்னவென்றால் அநேக பெற்றோர்கள்  குழந்தைகளுக்கு அல்லாஹ்வை முதலில் ஒரு தண்டனையாளனாகவே அறிமுகப்படுத்துகின்றனர். ‘’நீ இப்படி செய்தால் அல்லாஹ் நெருப்பில் பழுக்க காய்ச்சிய இரும்பால் வாயில் சுடுவான்’’ எனக்கூறல் எமது வீடுகளில் அச்சுறுத்தலுக்காக பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றாகும். இது குழந்தைகளுக்கு ஆரம்ப பருவத்திலேயே அல்லாஹ்வை ஒரு தண்டனையாலனாக அறிமுகப்படுத்துகின்றோம். இது பின்னைய  நாற்களில்  மார்க்கத்தின் மீது பற்றை குறைப்பதற்கு ஏதுவாகின்றது.

Sister Samina (Founder of Ayeina.com) தனது வாழ்க்கை அனுபவத்தினூடாக அல்லாஹ்வை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது சம்பந்தமாக பல பயனுள்ள தகவல்களை பின்வருமாறு பகிர்கின்றார்.

 குழந்தைகளுக்கு அல்லாஹ்வை எவ்வாறு அறிமுகப்படுத்தலாம்?

1.குழந்தைகளுக்கு அல்லாஹ்வுடைய திருநாமங்களில் அவனது அன்பை வெளிப்படுத்தும் நாமங்களை அறிமுகப்படுத்தல். 

ஐந்து வயதிற்கு உற்பட்ட குழந்தைகளுக்கு அல்லாஹ்வை முதலில் ஒரு தண்டனையாளனாக அறிமுகப்படுத்துவதற்கு பதிலாக அர் ரஹ்மான்(அன்பாளன்) அல் வதூத் (இரக்கமுள்ளவன்) போன்ற அன்பை வெளிப்படுத்தும் நாமங்களை கொண்டு அறிமுகப்படுத்தலாம். மேலும் நரகம் பற்றியும் இறுதிநாள் நிகழ்வுகளையும் சற்று பெரியவர்களான பிறகு விளக்கப்படுத்தலாம்.


2.அல்லாஹ் எம்முடன் அதிகம் இரக்கமுள்ளவன் என்பதனை உதாரணங்கள் மூலம் வெளிப்படுத்தல்.
ஆசிரியர் இதற்காக தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்கின்றார்.

தனது நான்கு வயது குழந்தை அவரது சிறிய சகோதரிக்கு விளையாட்டுப் பொருட்களை கொடுத்து விளையாடிக்கொண்டு இருக்கும்போது அவரை பாராட்டிய நான்,

 ''நீங்கள் உங்கள் சகோதரி மீது வைத்திருக்கும் அன்பானது அல்லாஹ் நம் மீது வைத்திருக்கும் அன்பின் வெறும் ஒரு வீதமே ஆகும். அல்லாஹ் தனது அன்பை நூறாக பிரித்து அதில் ஒரு வீதத்தை பூமிக்கு அனுப்பி வைத்தான். மீதி தொண்ணுதொன்பது வீதத்தை தன்னளவில் வைத்துக்கொண்டான். அந்த ஒரு வீத அன்பையே நாம் நமது அன்பானவர்களுக்கு இடையில் (நீங்கள் உங்கள் சகோதரியிடம் வைத்துள்ள அன்பை போல) பகிர்ந்து கொள்கின்றோம். ஆகவே அல்லாஹ் நம் மீது எவ்வளவு அன்பாளன் என்பதனை கற்பனை செய்து பாருங்கள்.'' என்று கூறினேன்.


3.சுவர்க்கம் பற்றிய தகவல்களை அதிகம் அதிகம் குழந்தைகளுடன் பரிமாறுதல்.

இவ்வுலகில் நாம் கஷ்டப்படும்போது அநியாயங்கள் நிகழ்த்தப்படும்போது படைப்பாளன் எங்கேஎன்ற கேள்விக்குறி எழுவது சாதாரணம். இந்த நிலையில் இந்த உலகம் நிலையற்றது எமது நற் செயல்களுக்கான கூலியை மறு  உலகில் அல்லாஹ் சுவர்க்கத்தில் தயார்படுத்தி உள்ளான் என்ற சுவர்க்கம் பற்றிய பலமான நம்பிக்கை எமது மார்க்க நம்பிக்கையை வலுவூட்டுகின்றது. இதே போல இந்த பலமான நம்பிக்கையை குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே விதைக்கும் போது அது அல்லாஹ்வின் வல்லமையை குழந்தைகள் புரிந்துக் கொள்ள ஏதுவாகஇருக்கும்.

ஆசிரியர் தனது மூன்று வயது குழந்தைக்கு சுவர்க்கத்தின் பிரமிக்கத்தக்க காட்சிகளை ஒவ்வொரு நாளும் படுக்கைக்கு செல்லும் முன் கூறுவதாக குறிப்பிடுகின்றார்.
நமது ஐம்புலத்தினாலும் என்றுமே உணராத சுவனத்து காட்சிகள், ஒலிகள் ,சுவைகள், மணங்கள், மற்றும் தொடுகை உணர்வுகளை அவர்களுக்கு ஏற்ற வகையில் விளக்கப் படுத்துவதாக கூறுகின்றார்.


4.தொழுகையை குழந்தைகளுக்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் அறிமுகப்படுத்தல்.

தொழுகையே எம்மை படைத்தவனுடன் தொடர்புக்  கொள்ள சிறந்த தளம் என்பதனை முன்மாதிரியாக நின்று செயற்படுத்தி காட்டுதல்.


5.உடல் உள ரீதியாக குழந்தைகள் கஷ்டத்தை உணரும் போது அவர்களது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் தளமாக அல்லாஹ்விடம் இறைஞ்சும் துஆவை அவர்களது வயதிற்கு ஏற்ற வகையில் அறிமுகப்படுத்தல்.


6.குழந்தைகளுக்கு நல்லது கெட்டது  எது நடந்தாலும் அல்லாஹ்வை தொடர்புபடுத்தல்.

குழந்தைகளுக்கு நல்லது நடக்கும் போது ‘’அல்ஹம்துலில்லாஹ் இது அல்லாஹ் உங்கள் மீது உள்ள அன்பினால் ஏற்படுத்தி தந்தான்’’ என்று கூறும் அதேவேளை கெட்டது நடக்கும் போது ‘’இதுவும் அல்லாஹ்வின் நாட்டத்தினாலேயே ஏற்பட்டது பெரிய தீங்கு ஒன்று நடப்பதிலிருந்து அல்லாஹ் எம்மை பாதுகாத்தான்’’ என்ற உண்மையையை குழந்தைகளுக்கு சொல்லுதல்.


Reference:- Ayeina.com